பேத்தியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு தொடரப்பட்ட நிலையில், உத்தராகண்ட் மாநில முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பகுகுணா தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.
உத்தராகண்ட் மாநில முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பகுகுணாவின் மருமகள், தனது மகளுக்கு மாமனார் பாலியல் தொந்தரவு அளித்ததாகப் புகார் அளித்தார். இதையடுத்து, ராஜேந்திர பகுகுணா மீது போக்சோ சட்டத்தின்கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், 59 வயதான ராஜேந்திர பகுகுணா தண்ணீர் தொட்டியின் மீது ஏறி தன்னைத்தானே சுட்டுஉயிரை மாய்த்துக் கொண்டார். பகுகுணா மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்த மூன்று நாட்களுக்குப் பிறகு அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
பாலியல் குற்றச்சாட்டு குறித்து ராஜேந்திர பகுகுணா மிகவும் மன அழுத்தத்திலும், கவலையிலும் இருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். மேலும், உயிரை மாய்த்துக் கொள்வதற்கு முன்பு, அவர் பலமுறை காவல் துறையின் அவசர எண்ணான 112இல் அழைத்து உயிரை மாய்த்துக் கொள்ளும் தனது திட்டம் குறித்து தெரிவித்தார். இதையடுத்து, போலீஸார் பகுகுணாவின் வீட்டை அடைந்த நேரத்தில், அவர் தண்ணீர் தொட்டியின் மீது ஏறி தன்னைத்தானே சுட்டுக்கொள்ளப் போவதாகத் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்து போலீஸார் அவரை உயிரை மாய்த்துக் கொள்ளவிடாமல் தடுக்க முயன்றனர். ஆனால் தன் மீது பொய் வழக்கு போடப்பட்டதாக திரும்ப திரும்பக் கூறிய ராஜேந்திர பகுகுணா, திடீரென துப்பாக்கியை எடுத்து மார்பில் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜேந்திர பகுகுணா, உத்தராகண்டில் 2004-05ஆம் ஆண்டில் என்.டி.திவாரி அரசில் இணை அமைச்சராக இருந்தார். சாலைவழி தொழிற்சங்கத் தலைவரான இவர், ஹல்த்வானி டிப்போ பணிமனையில் பணிபுரிந்து கடந்த அக்டோபர் 31ஆம் தேதி ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.








