பழனி அருகே விவசாய நிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகளால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
பழனி அருகே உள்ள கணக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கோம்பைபட்டி கிராமம் மற்றும் அதனை ஒட்டி அமைந்துள்ள இராமபட்டினம் புதூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்வது தொடர் கதையாகி உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த மலைப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி ஊருக்குள் வந்து செல்கின்றன. தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகம் காரணமாக வனப்பகுதிக்குள் தண்ணீர் இல்லாததாலும், உணவு பற்றாக்குறை காரணமாகவும் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் நுழையும் காட்டு யானைகள், அங்கு பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம், தென்னை, கொய்யா உள்ளிட்ட பயிர்களை உண்பது மட்டுமின்றி சேதப்படுத்தியும் விடுகிறது.
வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் கிராமங்களுக்குள் வராமல் தடுக்க சில ஆண்டுகளுக்கு முன்பு வனப்பகுதியை ஒட்டி அகழிகள் வெட்டப்பட்டன. அகழிகள் வெட்டியதன் காரணமாக வனவிலங்குகள் குறிப்பாக காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்கப்பட்டது விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே நிம்மதியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. வனத்துறை சார்பில் வெட்டப்பட்ட அகழியானது காலப்போக்கில் பராமரிப்பின்றி தூர்ந்து போனதால், கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் மீண்டும் கிராமங்களுக்குள் வரத் துவங்கியுள்ளன.
இரவுநேரங்களில் வந்து செல்லும் காட்டுயானைகள் தற்போது பகல் நேரங்களிலும் ஊருக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது. சம்மந்தப்பட்ட பகுதி ஒட்டன்சத்திரம் வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளதால், வனத்துறை தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வருவதற்குள், யானைகள் பயிர்களை சேதப்படுத்தி விடுகின்றன. எனவே தூர்ந்து போன அகழிகளை மீண்டும் தூர்வாரி யானைகள் வருவதை தடுக்கவும் பயிர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.