யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், அவரது பைக்கை எரித்துவிடலாம் என தெரிவித்துள்ளது. விளம்பரத்திற்காக இதுபோன்ற செயலில் ஈடுபடும் வாசனின் யூடியூப் சேனலை மூடிவிட வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் அருகே பைக் வீலிங் செய்த போது விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், அவரது ஜாமீன் மனுவை காஞ்சிபுரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
டிடிஎஃப் வாசனின் ஜாமீன் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், விளம்பரத்துக்காக இதுபோன்று செயலில் ஈடுபடும் வாசனின் யூடியூப் சேனலை மூடிவிடவேண்டும். அவரது பைக்கை எரித்துவிடலாம் என்று கருத்து தெரிவித்தார்.
மேலும், காயமடைந்த வாசனுக்கு சிறைச்சாலையில் உள்ள மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கும்படி கூறிய நீதிபதி, டிடிஎஃப் வாசனால் 45 லட்சம் சிறார்கள் தவறான வழிக்குச் செல்கிறார்கள். யூடியூப் சேனலில் வாசனைப் பார்க்கும் சிறார்கள் அதிவேகத்தில் பைக் ஓட்டுகிறார்கள். இதனால் விபத்துகள் நேரிடுகின்றன என்றும் தெரிவித்தார். மேலும் அவரது ஜாமீன் மனுவை நீதிபதி கார்த்திகேயன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
விசாரணையின்போது காவல்துறையினர் தரப்பில், பைக் வீலிங் செய்தபோது விபத்தில் சிக்கியும் 20 லட்சம் ரூபாய் பைக்கில் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான தலைக்கவசம் அணிந்திருந்ததால் வாசன் உயிர்தப்பியதாக தெரிவித்தனர்.