கோவை மாநகரில் குடிநீர் மற்றும் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில், பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட் மீதான விவாதம் இன்று மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் பேசிய பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், சிறுவாணி அணையைத் தூர்வாருவது குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்று கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கோவை மாநகராட்சியில் சாலைகள் மோசமாக உள்ளதாகவும் பாராமரிப்பு பணிகள் இல்லாமல் கோவை மிகவும் மோசமாக உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். கோரிக்கைள், மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, கேரள முதலமைச்சருடன் பேசி கோவை மாநகரின் குடிநீர் பிரச்னை தீர்க்கப்படும் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவையில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சிப் பணி மேற்கொள்ள, திட்ட அறிக்கை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
இதனையடுத்து, டிராபிக் சிக்னல்களுக்கு மின் கட்டணத்தை கட்டுவது யார் என்று கேள்வி எழுப்பி, அதை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அதன் மூலமாக மின்வாரியத்தில் ஏற்படும் நஷ்டத்தை குறைக்க முடியும் என்றும் வானதி சீனிவாசன் கூறினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என் நேரு, டிராபிக் சிக்னலுக்கான மின் கட்டணத்தை அந்தந்த நகராட்சிகள், மாநகராட்சிகள் தான் கட்டி வருவதாக விளக்கமளித்தார்.