தவெக அமைச்சரின் இந்து விரோத கருத்தை ஆமோதிக்கிறாரா முதலமைச்சர்? – நயினார் நாகேந்திரன்!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்றுவது குறித்த தவெக அரசின் நிலைப்பாட்டைத் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் வகையிலும், இந்து மக்களின் மனதைப் புண்படுத்தும் வகையிலும், “திருப்பரங்குன்றம் விஷயத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்த நடைமுறையையே கடைபிடிப்போம்” என்று தவெக அமைச்சர் நிர்மல் குமார் பேசியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.

மாற்று சக்தி என்று கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு, இந்து விரோத திமுகவின் சதிச் சுவடுகளையே பின்பற்றுவோம் என்று இன்று தவெக அமைச்சர் அறிவித்திருப்பது, தவெக ஒரு ஏமாற்று சக்தி என்பதையே நிரூபிக்கிறது. இந்து மக்களின் பண்பாட்டு உரிமையைப் பறிக்க முயலும் அமைச்சரின் இந்தக் கருத்தை
முதலமைச்சர் ஆமோதிக்கிறாரா? இந்துக்களின் பண்பாட்டு உரிமையைப் பறிக்கும் விதமாக, உயர்நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்க போகிறாரா? தீய சக்தி திமுகவுக்கும் “தூய சக்தி” தவெகவுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறாரா?

முதலமைச்சர் ஜோசேப் விஜய் வழக்கம்போல இதற்கும் வாய் திறக்காமல் இருப்பதை விடுத்து, திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்றுவது குறித்த தவெக அரசின் நிலைப்பாட்டைத் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.