மத்தியில் பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சி அமைந்தது முதல் திராவிட சிந்தாந்தம் கடும் தாக்குதல்களை சந்தித்து வருகிறது. இதில் பல வரலாற்று உண்மைகளை மறைத்தும், திரித்தும் சமூக வலைதளங்களில் பரப்பபடுகிறது என்ற எண்ணம் திராவிட சிந்தனையாளர்களிடம் உள்ளது. அதுமட்டுமின்றி, தந்தை பெரியார் கடவுள் மறுப்பு கொள்கைகளை தாண்டி பல்வேறு சமூக பிரச்சனைகளை பேசியுள்ளார். சமூகநீதி, பெண் விடுதலை, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை, சுயாட்சி என கூறிக்கொண்டே செல்லலாம். அனைத்து சமூக மக்களும் சமம் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்பதே பெரியாரின் தலையாய கடமையாக இருந்தது.
இந்த சூழ்நிலையில், திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி அமைந்த பின்னர் முதலமைச்சர் முக ஸ்டாலின், பெரியாரிய கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்ல பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். இதற்கு ஒருபுறம் நல்ல வரவேற்பும், மறுபுறம் எதிர்ப்பும் உள்ளது. எதிர்ப்பிற்கு முக்கிய காரணம், கடவுள் மறுப்பு கொள்கையாக இருக்கலாம் என்ற எண்ணம் பரவலாக உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த சூழ்நிலையில் திராவிடக் கருத்தியலை ஏற்றுக் கொள்பவர்கள், ஆனால் கடவுள் மத நம்பிக்கை உடையவர்கள் திராவிட இயக்கத் தமிழர் பேரவையில் இணைந்து பணியாற்ற முடியாது என்பதால் அவர்களை உள்ளடக்கிய ஒரு துணை அமைப்பாக அல்லது வெளிவட்டமாக திராவிட நட்புக் கழகம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்கின்றனர் திராவிட சிந்தனையாளர்கள்.
கடவுள் மத நம்பிக்கை உடையவர்களாக இருந்தாலும், சமூகநீதி, ஜனநாயகம், மதநல்லிணக்கம் ஆகிய மூன்றையும் ஏற்றுக்கொள்பவர்கள் திராவிடர் நட்புக் கழகத்தில் இணையலாம். இது திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் வழிகாட்டுதல்படி இந்த அமைப்பு இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கும் திமுகவிற்கு என்ன சம்பந்தம் என விசாரித்தவரை, திராவிடத்தின் மீது இளைஞர்களுக்கு ஓர் ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இது வரவேற்க கூடிய விஷயமாக இருந்தாலும், அவர்கள் திராவிட மாடல் என்ன என்பதை முழுமையாக அறிந்து கொள்ள இந்த அமைப்பு உறுதுணையாக இருக்கும் எனத் தெரிகிறது.
இதன் துவக்க விழா நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ், மனோ தங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இவ்விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழகத்தில் இருந்த பாடத்திட்டத்தை மாற்றி தமிழர்களின் அடையாளங்கள் மறைக்கப்பட்டன. அந்த காலகட்டத்தில் அதனை மீட்டெடுத்து தமிழர்கள் வரலாற்று பெருமைகளை உலகறிய செய்தவர் பெரியார். நாகர்கோவிலில் இருந்து தொடங்கப்பட்டிருக்கும் இந்த அமைப்பிற்கு திமுக என்றும் துணையாக இருக்கும். திராவிடம் என்ற தீப்பந்தத்தை கையில் ஏந்தியிருக்கும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் முக ஸ்டாலினுடன் இணைந்து அனைவரும் திராவிடத்தை போற்றுவோம் என்றார்.
திராவிடர் நட்புக் கழகத்திற்கு என மண்டல வாரியாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் திராவிட கொள்கைகளை மாநில முழுவதும் கொண்டு செல்வார்கள் எனத் தெரிகிறது.