கள்ள ஓட்டு போட வந்த திமுகவை சேர்ந்தவரை தாக்கி, அரைநிர்வாணமாக்கியதாக கைது செய்யப்பட்ட வழக்கில் அதிமுகவை சேர்ந்த இருவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் கள்ளஓட்டு போட சென்றதாக திமுகவை சேர்ந்த நரேஷ்குமார் என்பவரை தாக்கி, அரைநிர்வாணமாக்கியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதில் பிப்ரவரி 20ஆம் தேதி கைதான ஜெயக்குமாருக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதே வழக்கில் கைதான அதிமுக பிரமுகரான டில்லிராஜ் மற்றும் காளி என்கிற பரமேஸ்வரன் ஆகியோர் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, இருவரும் திருச்சியில் தங்கி இருக்க வேண்டும் எனவும், இரண்டு வாரங்களுக்கு அங்குள்ள கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இதே நிபந்தனைகளுடன் ஜாமீன் பெற்ற ஜெயக்குமார் திருச்சியில் தங்கியிருந்து கையெழுத்திட்டு வருகிறார்.








