2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடாது என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு கட்சி நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக வருகை தந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று சிவகாசியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது பேசிய அவர், ”தற்போது தேமுதிக எந்த கூட்டணியிலும் இல்லை. தமிழகத்தில் யாரால் நன்மை கிடைக்கும் என்பதை ஆராய்ந்து தேமுதிக வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்கும். தனித்து போட்டியிட வாய்ப்பில்லை” என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், ”தேர்தலுக்கு முன் ஒரு நிலைப்பாடு, தேர்தலுக்கு பின் ஒரு நிலைப்பாடு என இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளது திராவிட மாடல் திமுக அரசு. பொங்கல் தொகுப்பில் ஆயிரம் ரூபாய் அறிவித்துள்ளதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதிமுக ஆட்சியின் போது 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்திய முதல்வர் அதிமுக வழங்கிய 2 ஆயிரம் ரூபாயை வழங்கிட வேண்டும். எழுதாத பேனாவை வைத்து 80 கோடி ரூபாய் செலவில் கலைஞர் நினைவகம் அமைப்பதை எந்த தமிழர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்று கூறினார்.
பாஜகவை பற்றி பேசிய அவர், “மத்தியில் ஆட்சி செய்யும் அதிகாரத்தை பயன்படுத்தி பாஜக தமிழகத்தில் பெரிய சக்தியாக வளர முயற்சிக்கிறது. இதனை மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா என்பது தேர்தல் முடிவில் தெரியும். மத்திய, மாநில அரசுகள் பட்டாசு தொழிலை பாதுகாக்கவில்லை என்றால் தேமுதிக மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தும்” என்று தெரிவித்தார்.