சிதம்பரத்தில் 14 வயது மகளுக்கு திருமணம் செய்து வைத்த தீட்சிதர்,மாப்பிள்ளை மற்றும் மாப்பிள்ளையின் தந்தை ஆகியோர் கைதுது செய்யப்பட்டனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் வடக்கு வீதியை சேர்ந்த தீட்சிதர் சோமசேகர் என்பவரின் 14 வயது மகள் தற்போது 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு,அதே பகுதியை சேர்ந்த 24 வயது கொண்ட பசுபதி தீட்சிதர், அந்த சிறுமியை திருமணம் செய்து கொண்டதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து, குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவினர் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். அதன் பேரில் திருமணமான சிறுமி, மற்றும் அவரது தந்தையை கடலூர் மாவட்ட டெல்டா பிரிவு போலீசார் கடலூர் அழைத்து வந்தனர். பின்னர் அந்த சிறுமியிடம் கடலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்கள்,கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மகேஸ்வரி விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொண்டனர். 
அப்போது அந்த சிறுமி தனக்கு திருமணம் நடந்ததை ஏற்றுக்கொண்டார். பின்னர் இது பற்றி சமூக நல துறையின் மகளிர் ஊர் நல அலுவலர் கடலூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சிறுமி தனக்கு நடந்த திருமணத்தை ஒப்புக் கொண்டதால் குழந்தை திருமணம் செய்து வைத்ததற்காக சிறுமியின் தந்தை சோமசேகர் தீட்சிதர் (46),திருமணம் செய்த மாப்பிள்ளை பசுபதி தீட்சிதர்,மாப்பிள்ளை தந்தை கணபதி தீட்சிதர் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.







