டெல்லியில் 21 வயது பெண் கடத்திச் சென்று, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
நாடே 73-வது குடியரசு தினத்தை கொண்டாடி கொண்டிருந்த வேளையில், தலைநகர் டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணுக்கு, பெண்கள் சிலரே செருப்பு மாலை அணிவித்து, ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
டெல்லியில் உள்ள கஸ்துரிபா நகரில் 21 வயதுடைய திருமணமான பெண்ணை, ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் கடத்தி சென்று, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதில் கொடுமை என்னவென்றால், பெண்கள் சிலரின் உதவியோடு, அவர்களின் முன்னிலையிலேயே இந்த கொடூரம் அரங்கேறியிருக்கிறது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் தலை முடியை வெட்டி, கருப்பு சாயத்தை ஊற்றி, செருப்பு மாலை அணிவித்து, பொதுவெளியில் ஊர்வலமாகவும் அழைத்து சென்றுள்ளனர். அப்போது கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர், பாதிக்கப்பட்ட பெண்ணை தலையில் தாக்கும் காட்சி வெளியாகி இருக்கிறது.
காண்போர் நெஞ்சை உருக்கும் இந்த கொடூர சம்பவங்கள் அனைத்தையும் நேரில் பார்த்தவர்கள் செல்போனில் படம்பிடித்துள்ளனர். சம்பவம் குறித்து அறிந்து அங்கு விரைந்த போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு அழைத்து சென்றனர்.
சம்பந்தப்பட்ட பெண்ணை இளைஞர் ஒருவர் சில நாட்களாக பின்தொடர்ந்துள்ளார். இந்நிலையில், இளைஞர் திடீரென உயிரிழந்ததால், அவரது மரணத்திற்கும், இந்த பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாக கூறி, இளைஞரின் குடும்பத்தினர் இந்த கொடூர சம்பவத்தை நிகழ்த்தியுள்ளனர்.
அண்மைச் செய்தி: ’நியோ கோவ் வைரஸ் அச்சுறுத்தலாக மாறலாம்’
இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவத்தை செய்த அனைவருக்கும் தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மலிவால், இச்சம்பவம் தொடர்பாக டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, இந்த வழக்கு தொடர்பாக 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதில், 7 பேர் பெண்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







