கலைகளை டிஜிட்டல் உலகிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராயர் நகரில் உள்ள வாணி மஹாலில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், கலை பண்பாட்டு துறை சார்பில் நாட்டிய விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இயற்கையையும் கலையையும் மக்கள் மறந்து விட்டனர் . நல்ல பண்பாடு மற்றும் ஆன்மீக தன்மையை உருவாக்க கலைகளால் மட்டும் தான் முடியும் என தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் இணையத்தில் வைத்து உள்ளோம். அதை போல நம் கலைகளை டிஜிட்டல் உலகிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம் என தெரிவித்த அமைச்சர் மனோ தங்கராஜ் மதுபான கடையில் நல்ல கூட்டம், மெடிக்கலில் கூட்டம் இருக்கிறது ஆனால் பரதநாட்டிய நிகழ்வில் கூட்டம் இல்லை என்ற வருத்தம் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மனோ தங்கராஜ் மின் விநியோகம் குறித்த கேள்விக்கு பதில் அளித்தார். எத்தனை தடைகள் வந்தாலும் அதை சரி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முதலமைச்சர் எடுப்பார் எனவும், அதிமுக தற்போது இருப்பது கேப்டன் இல்லாத படகு போன்றது, அவர்கள் மற்றவர்களை குறை கூறுவது உகந்ததாக இருக்காது எனவும் தெரிவித்தார்.
காந்தி பிறந்த மண்ணில் கூட மதுபானங்கள் உச்ச அளவில் விற்கப்பட்டு வருகிறது, மது விற்பனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பரதம் உள்ளிட்ட கலைகளை மீட்டெடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் ஓலைச்சுவடிகளை ஆவணப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது எனவும் அமைச்சர் மனோ தங்கராஜ் மேடையில் பேசினார்.