திருவல்லிக்கேணி பகுதியில் சட்ட விரோதமாக கள்ள சந்தையில் கிரிக்கெட் போட்டிக்கான Tickets விற்பனை செய்த 30 நபர்கள் கைது. 42 டிக்கெட்டுகள் மற்றும் ரொக்கம் ரூ.55,100/- பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை, சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (08.10.2023) இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியினருக்கிடையே உலககோப்பை கிரிக்கெட் போட்டி பகல் இரவு ஆட்டமாக நடைபெறுகிறது. மேற்படி கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் (Black Market) சட்ட விரோதமாக விற்பனை செய்பவர்களை கண்காணித்து கைது செய்ய செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப, உத்தரவிட்டதின்பேரில், உயர் அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கண்காணித்து வந்தனர்.
D-1 திருவல்லிக்கேணி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை காவல் குழுவினர் சேப்பாக்கம், கிரிக்கெட் மைதானம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளான பட்டாபிராம் கேட், வாலாஜா சாலை, பெல்ஸ் ரோடு, வாலாஜா ரோடு சந்திப்பு, விக்டோரியா ஹாஸ்டல் சாலை சந்திப்பு, சேப்பாக்கம் இரயில்வே ஸ்டேஷன் ஆகிய 6 இடங்களில் தீவிரமாக கண்காணித்து, அங்கு சட்ட விரோதமாக கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் (BlaK Market) அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றத்திற்காக மொத்தம் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சென்னை மைலாப்பூரை சேர்ந்த 29 வயதுடைய சுரேன்குமார், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 31 வயதுடைய பாலகிருஷ்ணன், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பிரசாத் உட்பட 30 நபர்களை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து கள்ள சந்தையில் விற்பனை செய்ய வைத்திருந்த 42 டிக்கெட்டுகள் மற்றும் ரொக்கம் ரூ.55,100/- பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்குப்பின்னர் கைது செய்யப்பட்ட மேற்படி 30 நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.







