சுகாதாரத் துறைக்கு அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் முக்கியமானது என சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு வாகனத்தை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், பொதுமக்களிடம் இரண்டு வேண்டுகோளை முன்வைக்கிறேன், தகுதியான அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும், தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

பொதுவெளியில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும், மக்கள் அச்சப்பட தேவையில்லை எனக் கூற முடியாது, கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்திய அவர், “40 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது, அனைவரும் நன்றாக உள்ளனர், தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம். நாளை தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. கொரோனா பாதிப்பு நாள் ஒன்றுக்கு 7 ஆயிரம் நெருங்கி உள்ள நிலையில், 8 ஆயிரம் தாண்டி சென்றால் என்ன நடவடிக்கைகள் மேற்கொள்வது என்பது குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டும்” என்று தெரிவித்தார்.
அடுத்த இரண்டு வாரங்கள் சுகாதாரத் துறைக்கு மிகவும் சவாலானது எனவும் அவர் கூறினார்.







