திருத்தணி சம்பவம் ; வடமாநிலத்தவர் என்பதால் தாக்கப்பட்டாரா…? – ஐஜி அஸ்ரா கார்க் விளக்கம்…!

திருத்தணியில் சிறார்கள் 4 பேரால் வடமாநில இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் விளக்கம் அளித்துள்ளார்.

திருத்தணியில் சிறார்கள் 4 பேர் வடமாநில இளைஞரை அரிவாளால் வெட்டிய சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

திருத்தணி அருகே தாக்குதலுக்குள்ளான இளைஞர் ஒடிசாவை சேர்ந்தவர். அவர் வேலைக்காக தமிழகத்திற்கு வரவில்லை. சுற்றுலா நோக்கில் அவ்வப்போது அரக்கோணம், திருத்தணி ஆகிய பகுதிகளுக்கு ரயிலில் பயணித்து வந்ததுள்ளார். அந்த ரயிலில் இளைஞரை பார்த்த 4 சிறுவர்கள், அவர் தங்களை முறைக்கிறார் என தவறாக கருதி, அந்த நபரை தாக்கியுள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த ரயில்வே போலீஸார் உடனடியாக அந்த இளைஞரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கும், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டார். மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற அவர் நலமுடன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு அரசு சார்பில் சிறப்பான சிகிச்சையும் பாதுகாப்பு வழங்கப்பட்டது. மருத்துவமனையில் அவர் கைப்பட ஒரு கடிதம் எழுதி கொடுத்துவிட்டு தனது ஊருக்குச் சென்றுள்ளார்.

இளைஞரை தாக்கிய 4 சிறுவர்களிடமிருந்து இரண்டு பட்டாக்கத்திகளும், இரண்டு செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களில் 3 பேர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளனர். இன்னொருவர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அந்த இளைஞர் வடமாநிலத்தவர் என்பதற்காக தாக்கப்படவில்லை. தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.