தமிழகத்தில் முழு ஊரடங்கு? சுகாதாரத்துறை செயலாளர் பதில்!

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலாகாது என்றும் மினி ஊரடங்கை அமல்படுத்தவே ஆலோசிப்பதாகவும் சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த ஆண்டு மார்ச் மாதம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அக்டோபர் மாதத்திற்குப் பிறகு கொரோனா தொற்று குறைந்துகொண்டே…

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலாகாது என்றும் மினி ஊரடங்கை அமல்படுத்தவே ஆலோசிப்பதாகவும் சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த ஆண்டு மார்ச் மாதம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அக்டோபர் மாதத்திற்குப் பிறகு கொரோனா தொற்று குறைந்துகொண்டே வந்ததால் ஊரடங்கில் படிப்படியாக  தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்குத்  திரும்பியுள்ளனர். 

இந்த நிலையில் மார்ச் தொடக்கத்தில் இருந்து  மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. நேற்றைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் 1636 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று  எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு அமலாகுமோ  என்ற தகவல் பொதுமக்கள் மத்தியில் மீண்டும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

 இந்த நிலையில் நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, குறிப்பிட்ட தெரு, வீடு, பகுதிகளில் மட்டும் ஊரடங்கை செயல்படுத்த அரசு முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

 முழு ஊரடங்கு என்று யூகத்தின் அடிப்படையில் பரப்பப்படும் தகவல்களை நம்ப வேண்டாம்  எனக் கேட்டுக்கொண்ட அவர், முகக்கவசம் அணியாமல், அலட்சியமாக இருப்பதால் தான் கொரோனா பரவுவதாகவும், முகக்கவசம் அணிந்து, தனி மனித இடைவெளியைக் கடைபிடிப்பதோடு, தடுப்பூசியும் போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அதிகரித்து வரும் கொரோனாவை எதிர்கொள்ள கூடுதல் படுக்கைகள், வெண்டிலேட்டர்கள், மருந்துகள், தடுப்பூசிகள் தயார் நிலையில் உள்ளன எனவும் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்தார். 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.