“காங்கிரஸால் 50 தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாது” – பிரதமர் மோடி விமர்சனம்!

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 50 இடங்களில் கூட வெற்றி பெறாது என்றும், காங்கிரஸுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஒடிசாவின் கந்தமால் மற்றும் போலங்கிர் மக்களவைத் தொகுதிகளில்…

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 50 இடங்களில் கூட வெற்றி பெறாது என்றும், காங்கிரஸுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஒடிசாவின் கந்தமால் மற்றும் போலங்கிர் மக்களவைத் தொகுதிகளில் நடந்த தேர்தல் பேரணிகளில் உரையாற்றிய பிரதமர் மோடி,

“ஒடிசாவின் பெருமை ஆபத்தில் இருக்கிறது, அதை பாஜக பாதுகாக்கும். ஒடிசாவில் பாஜகவின் ‘டபுள் எஞ்சின்’ ஆட்சி அமைக்கப்படும். ஒடியா மொழி மற்றும் கலாச்சாரத்தை புரிந்து கொள்ளும் மண்ணின் மகன் அல்லது மகள் முதலமைச்சராக நியமிக்கப்படுவார். மாநிலத்தில் ஏராளமான இயற்கை வளங்கள் இருந்தும், மக்களை ஏழைகளாக வைத்திருக்க காரணமானவர்களை ஆட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும்.

ஒடிசா ஒரு பணக்கார மாநிலம், ஆனால் பெரும்பாலான மக்கள் ஏழைகள். இதற்குக் காரணமான பிஜேடி ஆட்சி மாநிலத்தில் இருந்து தூக்கி எறியப்பட வேண்டும். இந்த தேர்தலில் மக்களவையில் முக்கிய எதிர்க்கட்சியாக மாற, காங்கிரஸால் 10% இடங்களைக்கூட பெற முடியாது. 50 தொகுதிகளில் கூட அக்கட்சியால் வெற்றி பெற முடியாது.

காங்கிரஸ் இளவரசர் 2014 தேர்தல்களில் இருந்து அதே ஸ்கிரிப்டைப் படித்து வருகிறார். என் வார்த்தைகளைக் குறித்து வைத்துக் கொள்ளவும். தேசிய ஜனநாயக கூட்டணி அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும், இந்த முறை 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்” என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.