கோவையில் யூ-ட்யூப் சேனல் மூலமாக கோடிக்கணக்கில் பண மோசடி செய்த தம்பதி உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் விளாங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த ஹேமா, தனது கணவர் ரமேஷுடன் இணைந்து ‘மாடர்ன் மாமி’ என்ற யூ-ட்யூப் சேனல் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், தம்பதியினர் தங்களது பார்வையாளர்களிடம் ஆயிரத்து 200 ரூபாய் முதலீடு செய்தால் கூடுதலாக 300 ரூபாயுடன் சேர்த்து பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர். இதனை நம்பி பலர் இவர்களது வங்கி கணக்கில் பணத்தை செலுத்திய நிலையில், முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்துள்ளனர்.
இதனையடுத்து பன்னிமடை பகுதியைச் சேர்ந்த ரமா அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தம்பதியினர் 44 பேரிடம் 41 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த ரமேஷ், ஹேமலதா மற்றும் கேமரா மேன் அருணாச்சலம் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து 45 சவரன் தங்க நகைகள், 1½ கிலோ வெள்ளி பொருட்கள், ஸ்கூட்டர், டிஜிட்டல் கேமரா, 7 செல்போன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். தம்பதியினர் ஒன்றரை கோடி ரூபாய் வரை மோசடி செய்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
- பி.ஜேம்ஸ் லிசா








