சென்னை ஐஐடியில் சாதிபாகுபாடு இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இயக்குநர் காமகோடி கூறினார்.
சென்னை அடையாறில் உள்ள ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது:
”என்.ஐ.ஆர்.எப். தரவரிசை பட்டியலில் அனைத்து பொறியியல் கல்லூரிகளில் ஐஐடி மெட்ராஸ் முதலிடம் பிடித்துள்ளது. இது தன்னம்பிக்கையும் சரியான பாதையில் செல்கிறோம் என்ற நம்பிக்கையையும் கொடுத்துள்ளது. ஐஐடி மாணவர்களின் மனநிலையை உணர்ந்து கொள்ள பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறோம்.
கிராமப்புறங்களில் கூட பிஎஸ் டேட்டா பற்றி மாணவர்கள் பேசுகிறார்கள். அந்த அளவிற்கு தமிழ்நாட்டில் கல்வி முன்னேற்றம் அடைந்துள்ளது. தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி வளர்ச்சி நிகழ்ச்சி நடத்த உள்ளோம். சாதிய பாகுபாடு குறித்த 2 கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை சாதிய பாகுபாடுரீதியாக எந்த ஒரு புகாரும் இல்லை. சாதிய பாகுபாடு கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தரவரிசை என்பது ஒரு எண் தான். எந்த துறை படித்தாலும் அதிலும் இதே நிலை தான். கணினி துறையை விட நல்ல மேம்பாடு அனைத்து துறைகளிலும் உள்ளது. மாணவர்கள்
குறைந்த மதிப்பெண் எடுத்தால் பெற்றோர்கள் அவர்களுக்கு மனஅழுத்தத்தை உருவாக்க கூடாது. வருங்காலத்தில் பொறியியலில் துறைகள் என்ற பிரிவு இருக்காது, அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட வேண்டி இருக்கும். பின்வரும் காலத்தில் மருத்துவ அறிவியலுக்கு தான் அதிக மதிப்பு இருக்கும்.
முதல்முறையாக ஐஐடி மெட்ராஸ் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தான்சானியா நாட்டில் அமைக்க திட்டமிட்டு உள்ளோம். கிராமப்புறங்களில் நேரடியாக சென்று கல்வி வளர்ச்சிக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளோம். தமிழ்நாட்டிற்கு 204 பள்ளிகளில் 540 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பயிற்சி அளித்து வருகிறோம். வருடத்திற்கு 1 லட்சத்திற்கு மேலான மாணவர்களுக்கு எலெக்ட்ரானிக் குறித்த அறிவினை வளர்த்து உதவி செய்ய முடிவு செய்த்துள்ளோம்.
படிப்பில் ஆர்வம் உள்ள குழந்தைகளுக்கு புதுமையான கண்டுபிடிப்புகளை செய்ய புதிய கல்வி கொள்கையை கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். நுழைவு தேர்வு வைக்க காரணம் எத்தனை இடங்கள் உள்ளனவோ அதற்கு சரியான ஆட்களை கொண்டு வருவதற்கு தான். பொதுத் தேர்வில் பலர் ஒரே சதவீதம் பெறுகிறார்கள், அதனால் தான் நுழைவு தேர்வு.
கணினி அறிவியல் துறையில் கூட கணினி சம்மந்தப்பட்ட வேலை செய்வதற்கு மாணவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. அதிக சம்பளம் வரும் துறை மற்றும் சொகுசாக வேலை பார்க்கக்கூடிய சூழல் உள்ள துறையை தேர்ந்தெடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்தியா ஒரு வல்லரசு நாடாக மாற, தொடக்க நிறுவனங்கள் அதிகமாக உருவாக வேண்டும். மாணவர்கள் தொழில் முனைவோராக மாற வேண்டும். மேலும் அடுத்த ஆண்டு முதல் ஐஐடியில் மருத்துவ அறிவியல் ஆன்லைன் படிப்பினை தொடங்க உள்ளோம்.”
இவ்வாறு ஐஐடி இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார்.







