பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “ஈரானில் சிக்கித் தவித்த 345 தமிழக மீனவர்களை மீட்ட பிரதமர் மோடிக்கு நன்றி!
மத்திய கிழக்கு நாடுகளில் மீன்பிடித் தொழிலுக்காகச் சென்ற தமிழக மீனவர்கள் பலர், தற்போதைய போர்சூழலில் அங்கு சிக்கித் தவித்து வந்த நிலையில், அவர்களை மீட்கக்கோரி அவர்களது குடும்பத்தினர் பாஜக மீனவர் அணி மாநில அமைப்பாளர் சீமா மூலம் நமது தமிழக பாஜகவிடம் கோரிக்கை வைத்தனர். மீனவர்களின் உயிரைக் காக்கும் பொருட்டு மத்திய வெளியுறவுத்துறையைத் தொடர்பு கொண்டு, நாம் எடுத்த முயற்சியின் பலனாக, நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசினால் 345 தமிழக மீனவர்கள் ஈரானிலிருந்து பத்திரமாக மீட்கப்பட்டு, இன்று மாலையில் தாயகம் திரும்பவுள்ளனர்.
ஏற்கனவே, கிட்டத்தட்ட 6 லட்சம் இந்தியர்களை நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மீட்டுள்ள நிலையில், தற்போது திக்குத் தெரியாமல் தவித்த தமிழக மீனவர்களை மீட்டுள்ளது வரலாற்றுச் சிறப்புமிக்கது. தமிழக மீனவர்களைத் தொடர்ந்து காத்து வரும் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் தமிழக மக்கள் சார்பாகவும், தமிழக பாஜக சார்பாகவும் மிகுந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







