ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகளை வகுக்க குழு அமைத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் ஆன்லைன் வகுப்புகளை முறையாக கண்காணிப்பது குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆன்லைன் வகுப்பில் பாலியல் புகார் குறித்த நிகழ்வுகள் குறித்தும், அதன் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை குறித்தும் முதல்வர் ஆய்வு மேற்கொண்டார். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறக்கூடாது என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் முதலமைச்சர் உத்தரவிட்டார்.
ஆன்லைன் வகுப்புகளை, சம்பந்தப்பட்ட பள்ளிகள் பதிவு செய்ய வேண்டும் எனவும், ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகளை வகுக்க குழு அமைத்திட வேண்டும் எனவும், இணைய வகுப்புகளில் முறையற்று நடப்போர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ஆன்லைன் வகுப்புகள் குறித்து வரும் புகார்களை மாநிலத்தின் சைபர் கிரைம் போலீசார், உடனடியாக பெற்று சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் விசாரித்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.







