திமுகவிற்கு கொடுத்து பழக்கமில்லை எடுத்துதான் பழக்கம் – முதல்வர் விமர்சனம்

திமுகவுக்கு கொடுத்து பழக்கமில்லை; எடுத்துதான் பழக்கம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திண்டுக்கல் தேர்தல் பரப்புரையில் தெரிவித்துள்ளார். அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…

திமுகவுக்கு கொடுத்து பழக்கமில்லை; எடுத்துதான் பழக்கம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திண்டுக்கல் தேர்தல் பரப்புரையில் தெரிவித்துள்ளார்.

அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பொங்கல் பண்டிகையை, எளிய மக்களும் உற்சாகத்துடன் கொண்டாட பல்வேறு பொருட்களை அரசு இலவசமாக அளித்ததை சுட்டிக்காட்டினார்.

மேலும், பொங்கல் பண்டிகையின்போதும், கொரோனா காலத்திலும் அரசு சார்பில் நிதி உதவி அளிக்கப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார். இதுபோன்று, திமுக ஆட்சிக் காலத்தில் நிதி உதவி அளிக்கப்பட்டதா எனக் கேள்வி எழுப்பிய முதலமைச்சர், திமுகவுக்கு கொடுத்து பழக்கமில்லை, எடுத்துதான் பழக்கம் என்று விமர்சித்தார்.

இதைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது, இந்திய அளவில் அமைதிப் பூங்காவாக திகழ்வது தமிழ்நாடு எனக் கூறினார். தான் விவசாயியாக இருப்பதால் தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு உள்ளதாகவும் இதனால் பயிர்கள் செழித்து வளர்வதாகவும் கூறினார். திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய்விடும் எனவும் அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.