முறைகேட்டில் ஈடுபட்டதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தேவதானம் ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோயிலின் அறங்காவலர் மீதான புகார் குறித்து 12 வாரங்களில் விசாரணை நடத்தி முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர், பொன்னேரி அருகே உள்ள தேவதானம் ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோயிலின் பரம்பரை அறங்காவலராக இருந்தவர் கோபி. சமீபத்தில் இவர் முறைகேட்டில் ஈடுபட்டதாக வந்த புகாரின் அடிப்படையில், அவரை பணியிடை நீக்கம் செய்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து கோபி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ததையடுத்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு வழக்கானது விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயில் நிலங்களை மீட்பதற்காக அறங்காவலர் என்ற முறையில் கோபி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததாகவும், அதனால் பாதிக்கப்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள் அளித்த பொய் புகாரின் பேரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக கூறினார். மேலும், போதிய விளக்கம் கேட்காமல் பணியிடை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் பதிலளிக்கப்பட்டது.
இதனையடுத்து, தனது தரப்பு விளக்கத்தை அளிக்க வேண்டுமென அறங்காவலர் கோபிக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். அந்த விளக்கத்தின் அடிப்படையில், விசாரணை நடத்தி 12 வாரங்களில் இறுதி உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சௌம்யா.மோ






