பெங்களூருவில் இருந்து சென்னை வந்தடைந்த தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வந்தே பாரத் ரயில் பற்றி விரிவாக காணலாம்.
இந்தியாவின் 5-வது வந்தே பாரத் ரயிலை, சென்னை – பெங்களூரு – மைசூரு வழித்தடத்தில் பிரதமர் மோடி, பெங்களூரு கேஎஸ்ஆர் ரயில் நிலையத்திலிருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயில், வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படவுள்ளது. சென்னையில் இருந்து காலை 5.50 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில், காலை 10.25 மணிக்கு பெங்களூரு சென்றடைகிறது. இதனைத் தொடர்ந்து மதியம் 12.30 மணிக்கு மைசூரு சென்றடைகிறது. இந்த ரயில் காட்பாடி, கேஎஸ்ஆர் பெங்களூரு ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயிலான இது பெங்களூருவில் இருந்து இன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தது. சென்னை வந்த வந்தே பாரத் ரயிலை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் வந்தே பாரத் ரயிலை வரவேற்றார். மேலும் வந்தே பாரத் ரயிலுக்கு மேளதாளம் இசைத்து, மலர்கள் தூவி, மாலை போட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பள்ளி மாணவர்கள் பலர் இந்திய தேசிய கொடி அசைத்து வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சென்னை டூ மைசூரு – வந்தே பாரத் ரெயில் கட்டண விவரம்.
வந்தே பாரத் ரயிலை பொறுத்த வரை Chair car, Executive car என இரண்டு பிரிவுகளாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதன்படி சென்னை – மைசூர் இடையான வழித்தடங்களில் கட்டண விவரங்கள் பின்வருமாறு.
சென்னை – மைசூரு : Chair car – ரூ.1200 ; Executive car – ரூ.2295
சென்னை – காட்பாடி : Chair car – ரூ.495 ; Executive car – ரூ.950
சென்னை – கேஎஸ்ஆர் பெங்களூரு : Chair car – ரூ.995 ; Executive car – ரூ.1885
கேஎஸ்ஆர் பெங்களூரு – மைசூரு : Chair car – ரூ.515 ; Executive car – ரூ.985
வந்தே பாரத் ரயில் – பயண அட்டவணை
இந்த ரயிலின்மூலம், சென்னையில் இருந்து 4.05 மணி நேரத்தில் பெங்களூரு வந்தடையலாம். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நாள்தோறும் (புதன்கிழமை தவிர) காலை 5.50 மணிக்கு வந்தே பாரத் அதிவிரைவு ரயில் புறப்பட்டு காட்பாடிக்கு காலை 7.21 மணிக்கு சென்றடையும். 4 நிமிடங்கள் அங்கு நிறுத்தப்பட்ட பின்னர், காலை 7.25 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, காலை 10.15 மணிக்கு பெங்களூரு சிட்டி ரயில் நிலையம் வந்தடையும். அங்கு 5 நிமிடங்கள் நிறுத்தப்படும் இந்த ரயில், 10.20 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, 12.20 மணிக்கு மைசூரு சென்றடையும்.
அதே போல் மறுமார்க்கமாக வந்தே பாரத் ரயில் மதியம் 1.05 மணிக்கு மைசூரு ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மதியம் 2.50 மணிக்கு பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்திற்கு வந்தடையும். 5 நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்ட பின்னர், 2.55 மணிக்கு புறப்பட்டு மாலை 4.50 மணிக்கு ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தை கடக்கும். மாலை 5.36 மணிக்கு காட்பாடிக்கு வரும் ரயில், அங்கு 4 நிமிடங்கள் மட்டும் நிறுத்தப்படும். பின்னர் 5.40 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு 7.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தை வந்தடையும். இந்த ரயில் மூலம் மைசூருவில் இருந்து 1.45 மணி நேரத்தில் பெங்களூருவுக்கு வர முடியும்.
சிறப்பு அம்சங்கள்
வந்தே பாரத் ரயில் சிறப்பம்சம் என்னவென்றால் இது ஒரு மினி புல்லட் ரயில் என்று அழைக்கப்படுகிறது. இந்த ரயில் அதிகபட்சமாக மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது.
விமானத்தில் இருக்கும் அதிநவீன வசதிகள் இந்த ரயிலில் இடம் பெற்றுள்ளது. பயணிகளுக்கு விமானத்தில் பயணிப்பது போன்ற அனுபவம் கிடைக்கிறது. ரயில் முழுவதும் ஏசி வசதி, wifi வசதி, டிஜிட்டல் வசதி, தானியங்கி கதவு, சுழலும் இருக்கை, உணவு வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.
ரயில் வேகமாக செல்லும்போது அதிருமே என்ற பயம் இல்லாத வகையில், அதிர்வு குறைவு வசதி செய்யப்பட்டுள்ளது.வந்தே பாரத் ரயிலை மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் சென்னை ஐசிஎப் (Icf) முழுவதுமாக வடிவமைத்தது.
சென்னை வந்தடைந்த வந்தே பாரத் ரயில் குறித்து தெற்கு ரயில்வேயின் பொது மேலாளர் ஆர்.என்.சிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “மார்ச், ஏப்ரல் மாதங்களில் தண்டவாளங்களில் உள்ள இடர்பாடுகள் சரி செய்யப்பட்டு, மே மாதம் முதல் 130 கிலோ மீட்டர் வேகத்தில் “வந்தே பாரத்” இயக்கப்படும். அவ்வாறு 130 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் செல்லும் பட்சத்தில் தற்போதைய பயண நேரத்தை விட கிட்ட தட்ட ஒரு மணி நேரம் முன்னதாகவே இலக்கை சென்றடையும்.
சதாப்தி ரயிலை விட 200 ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்ற தகவல் உண்மையில்லை. அதே அளவு கட்டணம் தான் வசூலிக்கப்படுகிறது. தற்போது 75 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுவதால் சதாப்தி ரயிலை விட 20 நிமிடம் முன்னதாகச் செல்லும். நாளை முதல் சென்னை – மைசூரு வழித்தடத்தில் பயணிகள் உடன் செல்ல இருக்கிறது.
ரயில் அதி நவீன வசதிகள் கொண்டது. பாதுகாப்பான, வசதியான பயணம் செய்யலாம். சுழலும் இருக்கைகள், வைஃபை வசதி, உரிய பாதுகாப்பு வசதிகள் என அனைத்து வசதிகளும் உள்ளது. தற்போது 75 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் செலுத்தப்படுகிறது. விரைவில் 130 கிலோ மீட்டர் வேகத்தில் செலுத்தப்படும். ரயில் செல்லக்கூடிய வழித்தடங்களில் இருக்கும் தண்டவாளங்களில் பெரிய அளவில், தண்டவாள தடுப்பு வேலிகள் இல்லாததால் பாதுகாப்பு கருதி 75 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. வேகத்தை அதிகரிப்பதில், இதை தவிர எந்தவிதமான பிரச்னையும் இல்லை.
சிறப்பு பாதுகாப்பு வசதிகளுடன் தானியங்கி முறையில் நிற்க கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எதிரில் ரயில்கள் வந்தால் தானியங்கி முறையில் நின்று கொள்ளும். பேருந்துகளுடன் ஒப்பிடுகையில் 50 சதவீதம் குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.