தக்ஷின் பாரத் இந்தி பிரச்சார சபா முன்னாள் தலைவர் மற்றும் இந்நாள் நிர்வாகிகள் மீது 5.78 கோடி ரூபாய் நிதி முறைகேடு செய்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
தக்ஷின பாரத் இந்தி பிரச்சார சபாவின் சென்னை தர்வாத் மற்றும் சில இடங்களில் நிதி முறைக்கேடு நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் கடந்த டிசம்பர் மாதம் 2021 ஆம் ஆண்டு மத்திய கல்வி துறையில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை பிரிவில் இணைச்செயலாளர் நீதா பிரசாத் கொடுத்த புகாரை ஏற்று சிபிஐ மதுரை கிளை முதற்கட்ட விசாரணையை கடந்த பிப்ரவரி 2022ஆம் ஆண்டு நடத்தியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த விசாரணை அறிக்கையை அடிப்படையாக வைத்து சிபி ஐ வழக்குபதிவு செய்துள்ளது. இந்த முதற்கட்ட விசாரணையில் தக்ஷின பாரத் இந்தி பிரச்சார சபையின் சென்னை தலைமையகம், தென்னிந்தியாவில் இந்தி பேச தெரியாத நபர்களிடம் இந்தி மொழியை வளர்ப்பதற்காக அமைக்கப்பட்டது. 1964ஆம் ஆண்டு இந்த கல்வி நிறுவனம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. இந்த கல்வி அமைப்பின் முக்கிய பணியானது இந்தி மொழியை வளர்க்க தேர்வுகள் நடத்தி டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்கவும், இந்தி கற்பவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் கொண்டு வரப்பட்டது.
இதன் மண்டல தலைமையகம் ஹைதரபாத், தர்வாத், எர்ணாகுளம் மற்றும் திருச்சிராப்பள்ளியில் உள்ளது. அதுமட்டுமல்லாது கடலூர், நெய்வேலி, பாண்டிச்சேரி, கோயம்புத்தூர், சேலம் உட்பட 14 கிளைகளும் கொண்டுள்ளது. இந்த விசாரணையில் தக்ஷின் பாரத் இந்தி பிரச்சார சபாவிற்கு மத்திய அரசால் அளிக்கப்பட்ட நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்தது.
குறிப்பாக 2004, 2005 மற்றும் 2016,2017 இடைப்பட்ட காலத்தில் இந்த அமைப்பின் தலைவராக இருந்த மறைந்த நிரல் காட்டி மற்றும் அவரது.மகன் சிவயோகி ஆகியோர் நிதி
முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்தி மொழி வளர்ச்சிக்காக அளிக்கப்பட்ட நிதியை இந்தி மொழியை வளர்க்க பயன்படுத்தாமல் ஆயுர்வேதா, ஹோமியோபதி, சட்டக்கல்லூரி, ஆங்கில வழி பள்ளிகள் ஆகியவற்றிற்கு பயன்படுத்தியது தெரியவந்தது.
விதிப்படி இவ்வாறான கல்வி நிறுவனங்கள் அமைப்பதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்திடம் அனுமதி பெறாமல் நடத்தப்பட்டதும் அம்பலமானது. மேலும் தக்ஷின பாரத் இந்தி பிரச்சார சபாவின் தர்வாத் கிளை கேட்டதற்கிணங்க, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அளித்த நிதியை இந்தி வளர்க்கும் பணியில் ஈடுபடும் பல்வேறு ஆசிரியர்களுக்கும் முதல்வர்களுக்கும், இந்தி பயிற்சி பெறும் கல்லூரிகளுக்கும் பயன்படுத்தப்பட வேண்டும்.
குறிப்பாக மத்திய மனித வள மேம்பாட்டு துறை மொத்த செலவில் 75% நிதியாக அளிக்கும். மீதமுள்ள 25% தக்ஷன் பாரத் இந்தி பிரச்சார சபாவே பங்களிக்க வேண்டும். இந்த மொத்த நிதியும் குறிப்பிட்ட வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு அதன் மூலம் பல இந்தி ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த
விசாரணையில் இந்தி ஆசிரியர்களுக்கு சம்பள வினியோகம் செய்வதற்காக 7.44 கோடி
ரூபாய் பணம் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டு, செக் மற்றும் டிடிக்களாக அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தக்ஷின் பாரத் இந்தி பிரச்சார சபா 2004 ,2005 முதல் 2016,2017 வரை 10,68,89,626 ரூபாய் வரவு செலவு கணக்கு காட்டி உள்ளது. அதில் தக்ஷின் பாரத் இந்தி பிரச்சார சபாவின் பங்கு மட்டும் 1கோடியே 85லட்சத்து 66 ஆயிரம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வரவு செலவு கணக்கில் போலியான ஆவணங்களை தயார் செய்து முறைகேட்டில் ஈடுபட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் மத்திய அரசு அளித்த இந்த நிதியில் 2011- 2012 , 2016- 2017 ஆம் ஆண்டுகளில் 600 இந்தி இலவச வகுப்புகள் நடத்தப்பட்டதாகவும், 600 ஆசிரியர்களுக்கு பயண படிகள் மற்றும் மொழிப்பெயர்ப்பு பணிக்காக பயன்படுத்தப்பட்டதாக கணக்கு காட்டியுள்ளனர். ஆனால் அந்த காலக்கட்டத்தில் 400 முதல் 500 ஆசிரியர்கள் மட்டுமே இருந்திருப்பதும் அதிலும் முறைகேடு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு முறைகேடு செய்து 5கோடியே 78லட்சத்து 91 ஆயிரத்து 179 ரூபாய் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த முழு மோசடியையும் இந்தி பிரச்சார சபாவின் தலைவராக இருந்த நிரல் காட்டி மற்றும் 2014ஆம் ஆண்டிலிருந்து செயல் தலைவராக இருந்த அவரது மகன் சிவயோகி மற்றும் பெயர் குறிப்பிடாத அரசு அதிகாரிகள், தனி நபர்கள் ஆகியோர் கூட்டுச்சேர்ந்து செய்ததாக சிபி.ஐ வழக்குபதிவு செய்துள்ளது.