பாமக தலைவர் அன்புமணி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேல் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் 203 பணியாளர்களும் தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அவர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதற்குக் கூட திமுக அரசு மறுப்பது கண்டிக்கத்தக்கது.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொகுப்பூதிய பணியாளர்கள் 2011-ஆம் ஆண்டு முதல் 15 முதல் ஆண்டுகளாக இதே நிலையில் பணியாற்றி வருகின்றனர். தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி குறைந்தது ஆண்டுக்கு ஒரு முறை அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு போராட்டத்திலும் அவர்களுக்கு பாமக ஆதரவளித்திருக்கிறது. பலமுறை அவர்களை பணி நீக்கம் செய்ய பல்கலைக்கழகம் முயன்ற போது சட்டப்பேரவையிலும், அதற்கு வெளியிலும் குரல் கொடுத்து பணி நீக்கத்தை பாமக தடுத்து நிறுத்தியிருக்கிறது. அவர்களுக்கு பணிநிலைப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பாமக முழுமையாக ஆதரிக்கிறது.
அண்ணாமலை பல்கலைக்கழக தொகுப்பூதிய பணியாளர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது. அவற்றை நிறைவேற்றுவதில் எந்த சிக்கலும் இல்லை. அவர்கள் அனைவரும், அவர்கள் செய்யும் பணிக்கு ஏற்ற கல்வித் தகுதியை பெற்றவர்கள் ஆவர். இவர்களின் நியமனம் முழுவதும் விதிகளின்படியும், பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு ஒப்புதலுடனும் தான் செய்யப்பட்டுள்ளது. பணி நிலைப்பு செய்வதற்கான தகுதியும், திறமையும் கொண்ட தினக்கூலி பணியாளர்களை பணி நிலைப்பு செய்ய திமுக அரசு மறுப்பது சமூக அநீதி ஆகும்.
2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்கள் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், ஐந்தாண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், இதுவரை ஒரே ஒரு தற்காலிக பணியாளர் கூட பணிநிலைப்பு செய்யப்படவில்லை. அப்பாவி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துடன் தமிழக அரசு விளையாடுவது நியாயமல்ல.
அண்ணாமலை பல்கலைக்கழக தொகுப்பூதிய பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மறுப்பதற்கு எந்த விதமான நியாயமான காரணங்களும் இல்லை. அவர்கள் அனைவரும் விதிகளின்படி நியமிக்கப்பட்டவர்கள். அதுமட்டுமின்றி, மகளிர் உரிமைத் தொகையை முன்கூட்டியே வழங்கும் அளவுக்கு அரசிடம் நிதியும் குவிந்து கிடக்கிறது. எனவே, இல்லாத காரணங்களை கூறிக் கொண்டிருக்காமல் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொகுப்பூதிய பணியாளர்களின் பணி நிலைப்பு உள்ளிட்ட அனைத்துக் கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







