தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் சாலை விதிகளை மீறியதாக 2,781 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போக்குவரத்து காவல்துறையினர் 71 வாகனங்கள்ை பறிமுதல் செய்தனர்.
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களில் செல்லும்
இளைஞர்கள் சிலர், அதிவேகமாக மோட்டார் சைக்கிளை இயக்கி செல்லுதல், அளவுக்கு அதிகமான ஒலி எழுப்ப கூடிய வாகனங்களை பயன்படுத்துதல் என சாலை விதிகளை பின்பற்றாமல் இருந்து வருகின்றனர். இதனால் பல்வேறு விபத்துக்கள் ஏற்படுவதாகவும், பலர் பாதிக்கப்படுவதாகவும் தொடர் புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன.
இந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் புதிய காவல் கண்காணிப்பாளராக கடந்த சில
நாட்களுக்கு முன்பு பொறுப்பேற்ற டி.கே.சுரேஷ் குமார் கவனத்திற்கு இந்த புகார்கள் சென்ற நிலையில், இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகளை அழைத்து ஆலோசனை மேற்கொண்டார்.
மேலும் விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து காவலர் மற்றும் சட்டம், ஒழுங்கு காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
குறிப்பாக, மோட்டார் சைக்கிள்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய சைலன்ஸரை பொருத்தி இயக்கி வந்த நபர்கள், அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை இயக்கி வந்த நபர்கள், 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் இயக்கி வந்த மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்டவர்களை குறி வைத்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
அந்த வகையில், கடந்த இரண்டு தினங்களில் போலீசார் மேற்கொண்ட தீவிர வாகன தணிக்கையின் போது சாலை விதிகளை மீறி மோட்டார் சைக்கிள்களை இயக்கி வந்த 2,781 பேர் மீது மோட்டார் வாகனசட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, 71 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.







