ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் இபிஎஸ் அணிக்கு பாஜக ஆதரவு கிடைக்குமா என்பது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்.
பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளான பிப்ரவரி 3ம் தேதி, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், அண்ணா நினைவிடத்தில் மரியாதை செய்வதற்கான அனுமதி கேட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்த பின் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ”பிப்ரவரி 3ம் தேதி, அண்ணா நினைவு நாளையொட்டி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மரியாதை செய்யும் வகையில் அனுமதி கேட்டு மனு வழங்கி உள்ளோம். ஈரோடு இடைத்தேர்தலை பொறுத்தவரை வெற்றி எங்களுக்கு தான். களத்தில் நாங்கள் இருப்போம். அதிமுக ஆட்சி மன்றக்குழு கூடி கலந்து ஆலோசனை செய்து விரைவில் வேட்பாளரை அறிவிப்போம். வேட்பாளரை அறிவிக்க 31ம் தேதி வரை கால அவகாசம் இருக்கிறது.
அதிமுக கூட்டணியில் உள்ள கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கேட்டுள்ளோம். கூட்டணிக் கட்சியை பொறுத்தவரை எங்களுக்கு ஆதரவு உண்டு. பொதுக்குழு தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது. அதன்படியே இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைக்கும். அதிமுக வேட்பாளர் விண்ணப்பப்படிவத்தில் எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்திடுவார்.
விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள் என யாருக்கும் திமுக அரசு எதுவும் செய்யவில்லை. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் தோல்வி பெறுவது நிச்சயம். ஈரோடு கிழக்கு தொகுதியை பொறுத்தவரை திமுக பணம் கொடுக்க தயார் ஆகிவிட்டது.
அதிமுக பெரிய கட்சி என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலையே கூறியுள்ளார். எங்கள் கூட்டணி கட்சிகளின் ஆதரவு எங்களுக்குத் தான். யார் வேண்டுமானாலும் யாரிடம் வேண்டுமானாலும் ஆதரவு கேட்கலாம். எங்களைப் பொறுத்தவரை, எங்கள் கூட்டணி கட்சிகள் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன” என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.







