2 நாட்களில் 200 கோடி அள்ளிய ’பதான்’ – ஷாருக்கானின் ரியல் கம்பேக் என ரசிகர்கள் கருத்து

பாலிவுட் நடிகரான ஷாருக்கான் நடிப்பில் வெளியான `பதான்’ திரைப்படம் இரண்டே நாட்களில் சர்வதேச அளவில் 219.60 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஷாருக்கான் நடிப்பில் பதான் திரைப்படம்…

பாலிவுட் நடிகரான ஷாருக்கான் நடிப்பில் வெளியான `பதான்’ திரைப்படம் இரண்டே நாட்களில் சர்வதேச அளவில் 219.60 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஷாருக்கான் நடிப்பில் பதான் திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது. யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஜான் ஆப்ரஹாமும் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கானும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

பதான் படத்தின் பாடல் மற்றும் ட்ரைலர் வெளியானதிலிருந்தே அந்த படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வந்தது. தீபிகா படுகோன் காவி நிறத்தில் பிகினி உடை அணிந்து பேஷாரம் ரங் பாடலில் தோன்றியது கடும் சர்ச்சைக்கு உள்ளாகின.  பதான் படத்திற்கு வலது சாரி அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தின. படத்தை புறக்கணிப்போம் என்கிற முழக்கத்தையும் அவர்கள் எழுப்பினார்கள்.

இப்படி பல்வேறு  எதிர்ப்புகளுக்கு இடையே நேற்று முன்தினம் உலகம் முழுவதும் சுமார் 100 நாடுகளில் கிட்டத்தட்ட 2500 திரையரங்குகளில் பதான் திரைப்படம் வெளியானது.  சமீபகாலமாக இந்தி திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வருவதால் பதான் படத்தின் ரிசல்ட் பாலிவுட்டில் அதிக எதிர்பார்ப்புக்கு உள்ளாகியது.

இந்நிலையில், நீண்ட நாளைக்குப் பிறகு ஷாருக்கான் திரைப்படம் திரைக்கு வந்துள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இந்தி, தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியான பதான் வசூலை வாரிக்குவித்து வருகிறது. அந்த படம் வெளியான இரண்டு நாட்களில் 219.60 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாக பாலிவுட்டின் பிரபல சினிமா விமர்சகர் டாரன் ஆதர்ஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.