ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் கருத்துக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, அண்ணாமலை அரசியலுக்கு புதியவர் என்பதை அடிக்கடி நிரூபித்து வருகிறார் என விமர்சித்துள்ளார்.
தஞ்சையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரசியலுக்கு புதியது என்பதை அடிக்கடி நிரூபித்து வருகிறார். ஜெயலலிதாவை பற்றி அறியாமல் பேசுகிறார். பிரதமர் மோடி, வாஜ்பாய் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், ஜெயலலிதாவிடம் அன்புடனும் நட்புடனும் இருந்தவர்கள். 1998 வது தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து பாஜக காலூன்ற வாய்ப்பு கொடுத்தது ஜெயலலிதா தான். இதெல்லாம் தெரியாமல் அண்ணாமலை பேசி வருகிறார்.
அன்னை தெரசாவின் திட்டங்களை மனதார பாராட்டியவர், ஏழை எளிய மக்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் ஜெயலலிதா. அவரது 30 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் ஏராளமான சாதனைகள் செய்துள்ளார் அந்த சாதனைகளை பொறுக்க முடியாமல் தான் சிலர் அவர் மீது வழக்கு தொடுத்தனர். 1996 ஆம் ஆண்டு மட்டும் அவர் மீது 49 வழக்குகள் போட்டனர். அந்த வழக்கை எல்லாம் அவர் வென்றார். அவரது மரணம் வரை அவரை யாராலும் வெல்ல முடியவில்லை என தெரிவித்தார்.
மேலும் மருத்துவம் பொது கலந்தாய்வு முறையை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெறுவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயத்தை காக்க வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என தெரிவித்தார்.
- பி.ஜேம்ஸ் லிசா








