கோவையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அலுவலகத்தில் நுழைந்த நபர் அரசுப் பேருந்து மோதி உயிரிழந்ததாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவை பந்தய சாலை காவல் நிலையம் அருகில், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அந்த அலுவலகத்தை பயன்படுத்தி வருகின்றார். நேற்று மாலை 5:50 மணி அளவில் சட்டமன்ற அலுவலகத்திற்குள் நுழைந்த நபர் ஒருவர் அறையின் கதவுகளை உட்புறமாக பூட்ட முயன்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கதவை பூட்ட முயற்சித்த மர்ம நபரை சட்டமன்ற அலுவலகத்தில் இருந்த வானதி சீனிவாசனின் உதவியாளர் விஜய் பிடித்து வெளியேற்றினார். மேலும் இரவு 8.30 மணி அளவில் கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்திற்குள் மர்ம நபர் புகுந்தது குறித்து பந்தய சாலை காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். இதுகுறித்து பந்தயச் சாலை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதுதொடர்பாக அலுவலகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே அண்ணா சிலை சிக்னல் அருகே அலுவலகத்திற்குள் புகுந்த நபர் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடக்கும் தகவல் காவல்துறையினருக்கு கிடைத்தது . குடிபோதையில் இருந்த அந்த நபர் மீது வாகனம் மோதி உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் உடலை கைப்பற்றி கோவை மாநகர கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வானதி சீனிவாசன் சட்டமன்ற அலுவலகத்திற்கு நுழைந்த மர்ம நபர் யார் என்பது குறித்தும், எதற்காக அலுவலகத்திற்குள் நுழைந்தார் என்பது குறித்தும் , அவர் எப்படி உயிரிழந்தார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்து பேசிய வானதி சீனிவாசன், நேற்று தன்னுடைய எம்எல்ஏ அலுவலகத்திற்குள் நுழைந்த நபர் , அறையை உட்புறமாக பூட்ட முயன்று இருக்கின்றார், அந்த நபரை அலுவலகத்தில் இருந்த எனது உதவியாளர் வெளியேற்றி இருக்கின்றார் எனவும் தெரிவித்தார்.
இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது எனவும், அந்த நபர் வாகனம் மோதி உயிரிழந்ததாக கேள்விப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் சம்பந்தப்பட்ட நபர் யார், அவர் எந்த பின்னணியில் இருந்து அலுவலகத்திற்கு நுழைந்தார் , என்ன நோக்கம் என்பது குறித்து தெரியவில்லை எனவும், இதுகுறித்து காவல் ஆய்வாளரிடம் பேசியிருக்கிறோம் , யார் அந்த நபர் என்பது குறித்தும், என்ன நோக்கத்திற்காக வந்திருக்கிறார் என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும் என காவல்துறையினரை சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்தில் புகுந்த நபர், அரசுப்பேருந்து மோதி உயிரிழந்த்தாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.