திருப்பூரில் குப்பைகளை கொட்டுவது தொடர்பாக மாநகராட்சியை கண்டித்து பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போலீசாரின் தடையை மீறி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.
இந்த கைது சம்பவத்தை கண்டித்து தமிழ் நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
“திருப்பூர் மாநகராட்சி குப்பைகளை சின்ன காளிபாளையத்தில் கொட்டி வந்த திமுக அரசை எதிர்த்து ஒரு மாத காலமாக மக்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், இன்று போராட்டத்தில் பங்குபெற வந்த பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரும் தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவருமான சகோதரர் அண்ணாமலை அவர்களையும் பாஜக நிர்வாகிகளையும் ஏவல்துறை கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
மக்கள் குடியிருக்கும் பகுதியில் குப்பையை கொட்டி சுகாதார சீர்கேடு ஏற்படுத்தியதோடு போராடும் பொதுமக்கள் மீது தடியடி நடத்திய திமுக அரசுக்கு தமிழ் நாடு பாஜக சார்பாக ஏற்கனவே நான் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இன்று மக்கள் போராட்டத்திற்கு பாஜகவின் ஆதரவைத் தெரிவிக்க வந்தவர்களையும் திமுக அரசு கைது செய்திருப்பது அதன் பாசிச போக்கை அடிக்கோடிட்டு காட்டுகிறது.
அறவழியில் போராட முயன்ற தலைவர்களை சர்வாதிகார முறையில் அடக்கி ஒடுக்க முனையும் திமுக அரசுக்கு, குப்பைகளை முறையாக அப்புறப்படுத்த திராணியில்லையா? அல்லது மனமில்லையா? மொத்தத்தில், பொதுமக்கள் நலனை தூக்கியெறிந்து, பாசிசத்தை மட்டுமே தூக்கிப் பிடிக்கும் திமுக அரசு தனது அகங்காரத்தாலேயே வீழும் நாள் தொலைவிலில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.







