புனித ரமலான் நல்வாழ்த்துகள் – டிடிவி தினகரன் பதிவு!

அனைவருக்கும் எனது உளம் கனிந்த இனிய ரமலான் நல்வாழ்த்துகள் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பெருநாளை மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் கொண்டாடி மகிழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த இனிய ரமலான் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பசித்தவர்களுக்கு உணவளியுங்கள், நோய்வாய்ப்பட்டவர்களுக்கு உதவுங்கள், துன்புற்றவர்களுக்கு உறுதுணையாக இருங்கள், அயலார்களிடம் அன்பு செலுத்துங்கள் போன்ற இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் போதனைகளை மனதில் நிறுத்தி, உடலையும் உள்ளத்தையும் ஒருநிலைப்படுத்தி தூய்மை உணர்வோடு ரமலான் நோன்பு இருந்த இஸ்லாமியச் சகோதர, சகோதரிகள் அனைவரின் எண்ணங்களும் விருப்பங்களும் ஈடேரற்றும் என இந்நாளில் பிரார்த்திப்போம்.

ரமலான் மாதத்தில் புனித நோன்பினை மேற்கொண்டு இறை உணர்வுடன் ஈகைத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரின் வாழ்விலும் அன்பு, அமைதி, இரக்கம், கருணை, ஒற்றுமை உணர்வு மற்றும் சகோதரத்துவம் தழைத்தோங்கிடவும், வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் தீர்ந்து உலக மக்கள் அனைவரின் வாழ்விலும் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்திட வேண்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை எனது புனித ரமலான் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.