புதுச்சேரியில் நடந்து முடிந்த காவலர் தேர்வில் ஆட்டோ ஓட்டும் இளைஞர் ஒருவர் தனது விடா முயற்சியால் காவலராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரியில் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் காவலர் தேர்வு நடத்தப்பட்டது. காவல்துறையில் காலியாக உள்ள 390 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான உடல் தகுதி தேர்வுகள் கடந்த மாதம் நடத்தப்பட்டன. இந்த உடல் தகுதித் தேர்வில் 2,644 பேர் எழுத்துத் தேர்வுக்குத் தகுதி பெற்றனர். அவர்களுக்கான எழுத்துத் தேர்வு புதுச்சேரியில் உள்ள 5 மையங்களில் முன்தினம் நடந்தது. இதில் 2,626 பேர் தேர்வுகளை எழுதினார்கள்.
இந்த காவலர் தேர்வு முடிவுகள் நேற்று அதிகாலை வெளியிடப்பட்டது. இந்த காவலர் தேர்வில் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த ஏராளமானோர் தேர்வாகியுள்ளனர். இதனிடையே புதுச்சேரி, ஜீவா நகரைச் சார்ந்த கந்தன்(31) என்ற இளைஞர் சிறு வயதில் இருந்து போலீஸ் ஆக வேண்டும் என்ற கனவிலிருந்து வந்துள்ளார். 12 ஆம் வகுப்பு வரை படித்து முடித்து பின்னர் ஐடிஐ படித்த பின்னர் படிக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. தந்தை கூலி வேலையும் தாய் வீட்டு வேலையும் செய்து வந்ததால் குடும்ப வறுமையின் காரணமாக மேல் படிப்பைத் தொடர முடியாமல் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆட்டோ ஓட்டும் தொழிலை செய்து வந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் ஆகி 1 வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில் காவலர் தேர்வு தேதி அறிவிப்பு வந்தவுடன் எப்படியாவது தனது கனவை நனவாக்கும் வகையில் ஆட்டோ ஓட்டிக்கொண்டே உடலை தகுதி செய்துக்கொண்டு , எழுத்துத் தேர்வுக்கும் தயரானார். பல்வேறு இன்னல்கள் வந்த சூழலிலும் தனது விடா முயற்சியால் உடல் தேர்வில் தேர்வான கந்தன் எழுத்து தேர்விலும் தேர்ச்சி பெற்றார். தனது விடா முயற்சியால் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதை சக ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
சில வருடங்களுக்கு முன் தமிழில் விஜய் நடிப்பில் வேட்டைக்காரன் திரைப்படம் வெளியானது. அதில் நடிகர் விஜய், ஆட்டோ ஓட்டிக்கொண்டே படித்து போலீஸ் ஆவார். தற்போது அது நிஜ வாழ்வில் ஒருவருக்கு நடந்திருப்பதைப் பார்க்கும்போது சற்று பிரமிப்பாகத்தான் இருக்கின்றது.







