அதிமுகவினருக்கு மக்களை பற்றி கவலையில்லை, நாட்டை பற்றி கவலை இல்லை என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கொன்னக்குளம் கிராமத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 99வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் உரையாற்றி அவர், இன்றைக்கு கூட எதிர்கட்சியில் அவர்களுக்குள்ளே இருக்க கூடிய கோஷ்டி பூசல் மற்றும் சண்டையில் கூட திமுக ஒரு தலை பட்சமாக செயல்படுவதாக பேசுகிறார்கள். பொதுக்குழு தொடங்குவதற்கு முன்பே சி.வி. சண்முகம் காட்டு மிராண்டியை போல மைக்கை பிடித்து ஆவேசமாக பேசினார். வீதிகளில் பேச கூடியவர்கள் போல் நாலாந்தரமாக நடந்து கொண்டார் என்றால் அது எப்படி பட்ட இயக்கம் என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், அவர்களுக்கு இந்த நாட்டை பற்றி கவலை இல்லை, மக்களை பற்றி கவலை இல்லை. அவர்களுடைய எண்ணம் எல்லாம் எப்படியாவது மீண்டும் வந்து இந்த நாட்டை கொள்ளை அடிக்க வேண்டும் என்ற நோக்கதோடு இருக்க கூடிய ஒரு இயக்கம் என்று கூறினார்.
மேலும், எப்படி அண்ணா இறந்த பிறகு திமுக காலி ஆகி விடும் என்று நினைத்தார்களோ, அது எப்படி கலைஞரால் பொய்ப்பிக்கபட்டதோ, அதே போல் கலைஞர் மறைவிற்கு பிறகு திமுகவில் பிரச்சனைகள் வரும் என்று நினைத்தார்கள். எதிர் பார்த்தவர்கள் ஏமார்ந்து விட்டார்கள் என்றார்.
இன்றைக்கு மு.க.ஸ்டாலின், கலைஞரை போல் அண்ணாவை போல் தமிழ்நாட்டு மக்களுக்கு நல் வாழ்க்கையை தந்து கொண்டிருக்கிறார் என்பதை நினைக்கையில் அவர்களுக்கு பொறாமையாக உள்ளது. அந்த பொறாமையின் உச்சத்திலே தான் பொதுக்குழுவை கூட்டி அவர்கள் அடித்து கொள்கிறார்கள். மக்களுக்காக இருக்கக்கூடிய ஒரு இயக்கம், தமிழ் இனத்திற்காக மொழிக்காக தன்னை அர்ப்பணித்து கொண்டிருக்க கூடிய கடமை கண்ணியம் கட்டுப்பாடு மிக்க இயக்கமாக திமுக இருக்கிறது என கூறினார்.








