தவெக தலைவர் விஜய்க்கு நடிகர் பிரகாஷ் ராஜ் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் நேற்று (அக். 27) நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு வந்த விஜய், சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ரிமோட் மூலம் மேடையில் இருந்தே 100 அடிக் கம்பத்தில் கொடியேற்றினார். பின்னர் தொண்டர்களிடையே பேசிய அவர் அரசியல், தங்களின் அரசியல் நிலைப்பாடு, கட்சியின் கொள்கை, கொள்கைத் தலைவர்கள் குறித்து பேசினார். பெண்களை கொள்கைத் தலைவர்களாக கொண்டு இயங்கும் ஒரே கட்சி தவெக தான் எனவும் தெரிவித்தார்.
பேச்சுக்கு நடுவே பல கட்சிகளையும் மறைமுகமாக சாடினார். பிளவுவாத அரசியல், திராவிட மாடல், நீட் எதிர்ப்பு, சாதி வாரி கணக்கெடுப்பு என முதல் மாநாட்டிலேயே அரசியல் பிரச்னைகள் குறித்து பேசினார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் அதிக சம்பளம் பெறும் நடிகராகவும் இருக்கும் இந்த காலகட்டத்தில், என்ன காரணத்துக்காக தான் அரசியலுக்கு வந்திருக்கிறேன் என்பதை விஜய் தெளிவுபடுத்தியுள்ளார். தனது முதல் மாநாட்டில் கிட்டதட்ட 45 நிமிடங்கள் பேசினார்.

தவெக தலைவர் விஜய்க்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் “உங்கள் புதிய பயணத்திற்கு All The Best செல்லம்” என்று பதிவிட்டுள்ளார்.







