திருவண்ணாமலையில் அரசு புறம்போக்கு நிலம் மற்றும் நீர் நிலையில் ஆவின் பால் குளிரூட்டும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளதா என்ற ஆய்வுப் பணிகளை விரைந்து முடிக்கும்படி மாவட்ட ஆட்சியருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் தாக்கல் செய்த மனுவில், திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு கிராமங்களில் ஏரி, ரேடியோ பூங்கா ஆகிய இடங்களில் ஆவின் நிறுவனத்திற்குச் சொந்தமாகப் பால் குளிரூட்டும் நிலையங்களுக்கான கட்டுமானங்களை உருவாக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நிலுவையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அண்மைச் செய்தி: ‘மீண்டும் சூடுபிடிக்கும் குட்கா வழக்கு; விசாரணைக்கு தமிழ்நாடு அரசு அனுமதி!’
இந்த மனு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் உத்தரவில், ஏழுமலை அளித்த புகார் குறித்து மாவட்ட ஆட்சியர் விரைவாகப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், ஆக்கிமிரப்பு உறுதி செய்யப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர். ஆக்கிரமிப்பு இல்லை என மாவட்ட ஆட்சியர் முடிவெடுத்தால், ஆவின் நிறுவனம் கட்டுமானங்களைத் தொடரலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.








