தென்கிழக்கு அரபிக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காலை 05.30 மணிக்கு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்மண்டலம் தற்பொழுது மேற்கு தென்மேற்கு கோவாவிற்கு 920 கிலோமீட்டர் தொலைவிலும் தெற்கு தென்மேற்கு மும்பைக்கு 1120 கிலோமீட்டர் தொலைவிலும் மற்றும் போர்பன் தெற்கு போர்பந்தர்க்கு 1160 கிலோமீட்டர் தொலைவிலும் மற்றும் கராச்சி பகுதிக்கு 1520 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்து 24 மணி நேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடலில் புயலாக வலுப்பெற கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு கேரளா மற்றும் தெற்கு கர்நாடகாவின் உள்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேஷ் மாநிலத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், தென்மேற்கு பருவமழை கேரளாவில் துவங்குவதற்கான சாத்திய கூறுகள் தொடர்ந்து நிலவி வருவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அது புயலாக உருவானால், அதற்கு “பைபர்ஜோய் புயல்” அதாவது “பேரழிவு” என்று பெயர் வைக்கப்படும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா