உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் ஒன்றரை வயது மகளை தோளில் தூக்கிக் கொண்டு நடந்து சென்ற நபர் ஒருவரை அருகில் இருந்து மர்மநபர்கள் தலையில் சுட்டுக் கொன்ற குற்றச்சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
இந்த சிசிடிவி காட்சியில் பாதிக்கப்பட்ட 30 வயதான ஷோயப் என்ற நபர் தனது மகளுடன் பாபுசாய் பகுதியில் ஒரு குறுகிய சாலையில், நடந்து செல்வதைக் காட்டுகிறது. அப்போது எதிர் முனையிலிருந்து ஆயுதம் ஏந்திய ஒருவர் வந்து துப்பாக்கியை வெளியே எடுத்து, ஷோயப் என்ற அந்த நபரை அருகில் இருந்து துப்பாக்கியால் தலையில் சுட்டுவிட்டு, அங்கு காத்திருந்த இருவருடன் பைக்கில் ஏறி தப்பி ஓடிவிட்டனர்.
இதற்கிடையில், பாதிக்கப்பட்டவர் உடனடியாக சாலையில் சரிய, ஷோயப் தோளில் இருந்த அவரது மகளும் கீழே விழுந்தார். துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்து, படுகாயமடைந்த அந்த நபரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். தற்போது மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வரும் அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஷோயப் தோளில் இருந்த அவரது குழந்தை பத்திரமாக இருப்பதாகவும், சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் தாரிக் உட்பட மூன்று சந்தேக நபர்கள் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. குஃப்ரான் மற்றும் நதீம் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தப்பித்து செல்ல பயன்படுத்தப்பட்ட பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது குற்றவாளியான தாரிக் என்பவரைக் கண்டுபிடிக்க சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி அசோக் மீனா கூறினார்.
ஷாஜஹான்பூரில் ஒருவர் சுடப்பட்டதற்கான காரணம்;
கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் முதற்கட்டமாக, சோயப் திருமணம் செய்துகொண்ட சாந்தினி என்ற பெண்ணுடன் தாரிக்கின் சகோதரருக்கு முதலில் நிச்சயதார்த்தம் நடந்ததுள்ளது. பின்னர் அந்த பெண் தாரிக்கின் சகோதரரை விட்டுவிட்டு சோயப்பை திருமணம் செய்து கொண்டார். இதனால் தாரிக்கின் சகோதரரது நிச்சயதார்த்தம் நிறுத்தப்பட்டது. முறிந்து போன நிச்சயதார்த்தத்தால் அவமானமாக உணர்ந்த தாரிக்கின் சகோதரர், பழிவாங்கும் செயலாக இந்த சம்பவத்தை ஏற்பாடு செய்துள்ளார்.
போலீசாருக்கு அளித்த வாக்குமூலத்தில், சோயப் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சாந்தினியை திருமணம் செய்து கொண்டதாக சோயப்பின் மாமா கூறினார். திருமணத்திற்கு முன், சாந்தினிக்கு மொஹல்லேயின் அண்டை வால் பகுதியில் வசிக்கும் தாரிக்கின் சகோதரருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் சிறுமியின் பெற்றோர்கள் சாந்தினியை தாரிக்கின் சகோதரருக்குத் திருமணம் செய்து வைப்பதை எதிர்த்து, அதற்குப் பதிலாக சோயப்பைத் தேர்ந்தெடுத்தது தாரிக்கின் தன்மானத்தை பாதித்தது. இதனாலயே பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த குற்றச்சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று கூறினார்.
முன்னதாக, பலமுறை தான் அவமானப்படுத்தப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்கத்தை தாரிக் வெளிப்படுத்தியும் இருக்கிறார் என்கிறார்கள். பாதியில் முடிந்த நிச்சயதார்த்தத்தால் அவமானமாக உணர்ந்த தாரிக், பழிவாங்கும் செயலாக இந்தச் சம்பவத்தை ஏற்பாடு செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தொடர்கிறது.
- பி.ஜேம்ஸ் லிசா








