சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே, அமரத்தானூர், காரப்பட்டி பள்ளம் பகுதியில், அதிமுக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசியவர், “தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையாக உள்ளது. இன்னும் சில கட்சிகள் கூட்டணியில் இணையும். இப்போது அதை பகிரங்கமாக சொல்ல முடியாது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இருக்குமா, இருக்காது என்பதே சந்தேகத்திற்குரியதாக உள்ளது. மொழிப் போர் தியாகிகளுக்கு ஆண்டுதோறும் ஜனவரி 25-ம் தேதி கூட்டம் நடத்தி வருகிறோம். அதை திரைப்படமாக எடுத்துள்ளனர். திரைப்படத்தை வைத்து கருத்து சொல்ல முடியாது. அந்த கால சூழ்நிலையில் தமிழ்மொழியைக் காப்பாற்ற முன்னோர்கள் பாடுபட்டனர். அப்போது இருந்த சூழ்நிலை வேறு. இப்போது இருக்கும் நிலை வேறு.
திமுக அரசு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் ஒரு நாடகம். மத்திய அரசு அறிவித்த ஓய்வூதியத் திட்டத்தையே பூசி மொழுகி அறிவித்துள்னர். எதையுமே புதியதாக அறிவிக்கவில்லை. திமுக அரசு தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டத்தையே அரசு ஊழியர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் பங்களிப்பு ஓய்வூதியத்தையே வழங்கியுள்ளனர்.
அகவிலைப்படி மட்டுமே புதியதாக உள்ளது. ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக அதிமுக ஆட்சி அமைந்தால் சூழ்நிலையைப் பொறுத்து முடிவு செய்யப்படும். எங்களால் முடியாத திட்டங்களை நாங்கள் அறிவிக்க மாட்டோம். களத்தில் போராடும் அரசு ஊழியர்கள் திமுக தேர்தல் நேரத்தில் அறிவித்த கோரிக்கைகளை நிறைவேற்ற போராடி வருகின்றனர். வாக்குறுதி கொடுக்கும்போது எண்ணியிருக்க வேண்டும். வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்து விட்டு நிறைவேற்றாமல் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.







