சென்னை – கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் வாணியம்பாளையம் கிராம பேருந்து நிறுத்தம் அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,
“விழுப்புரம் மாவட்டம் மற்றும் வட்டம், சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில், வாணியம்பாளையம் கிராம பேருந்து நிறுத்தம் அருகில் நேற்று (13.3.2026) காலை 6.00 மணியளவில் விழுப்புரம் மாவட்டம், ப.வில்லியனூர் கிராமத்தைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட நபர்கள் கரும்பு வெட்டும் வேலைக்காக நான்கு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது கோலியனூரிலிருந்து பண்ருட்டி வழியாக எம்.சாண்ட் ஏற்றி வந்த டிப்பர் லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக நான்கு சக்கர வாகனத்தின் பின்பக்கமாக மோதிய விபத்தில் அந்த வாகனத்தில் பயணம் செய்த சேகர் (வயது 65) த/பெ.தணிகாசலம் என்பவர் உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இந்த விபத்தில் பலத்த காயமடைந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வீரவேலு (வயது 65) த/பெ.வீராசாமி, செங்கேணி (வயது 58) க/பெ.ஆறுமுகம், பாக்கியம் (வயது 55) க/பெ.அண்ணாதுரை மற்றும் சுதாகர் (வயது 45) த/பெ. அரசன் ஆகிய நான்கு நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 1 இலட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







