சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பெண்களைக் குறித்து அருவருக்கத்தக்க வகையில் தொடர்ந்து பேசி வருவதாக நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் செயற்பாட்டாளர் திவ்யா, நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில் ட்விட்டர், யூ-டியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் பெண்கள் குறித்து அருவருக்கத்தக்கத் தகாத வார்த்தைகளைத் தொடர்ந்து பேசி வருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், அரசியல் மட்டுமல்லாமல் சமூகத்தில் ஏற்பட்டு வரும் அநீதிகளுக்கு எதிராகப் பேச பெண்கள் தற்போதுதான் முன்னுக்கு வர துவங்கியுள்ளதாகவும், அவர்களை இதுபோன்ற நபர்கள் தடுக்கும் எண்ணத்துடன் சொந்த விஷயங்களைக் குறிப்பிட்டு அருவருக்கத்தக்க வகையில் பேசுவது ஏற்புடையது அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமட்டுமின்றி பயில்வான் ரங்கநாதன் போன்று பலரும் பெண்களுக்கு எதிரான அவதூறு கருத்துக்களைப் பரப்பி, பெண்களின் கருத்து சுதந்திரத்தை ஒடுக்கத் துவங்கியுள்ளதால், இதை உடனடியாகத் தடுக்க வேண்டியது அவசியம் எனவும், பயில்வான் ரங்கநாதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தனது புகாரில் பெண் செயற்பாட்டாளர் திவ்யா தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
புகார் அளித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை எதிர்கொள்ளப் பெண்கள் தயாராக இருப்பதாகவும், ஆனால் அவர்களின் சொந்த விஷயங்களைக் கிளறி அருவருக்கத்தக்க வகையில் பயில்வான் ரங்கநாதன் போன்ற நபர்கள் பேசி வருவதாகவும் தெரிவித்தார். மேலும், முதலமைச்சர் கடந்த சில நாட்களுக்கு முன் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிடுவோர் மீது நடவடிக்கை எடுக்க தனியாக குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்ததன் அடிப்படையில், பெண்களின் கருத்து சுதந்திரத்தை ஒடுக்க எண்ணி அவதூறு கருத்துகளை சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பேசி வரும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், அவரைப் போன்று இன்னும் பெண்களுக்கு எதிராகக் கருத்துக்களைப் பதிவிடும் நபர்களைக் கண்டறிந்தும் உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.