தமிழக கடல்பரப்பில் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி வழங்க கோரிய
மனுக்கள் மீதான இடைக்கால உத்தரவை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது
தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் வரும் கடல் பகுதியில் சுருக்குமடி வலைகளை
பயன்படுத்த அனுமதிக்க உத்தரவிடக்கோரியும், அதேவேளையில் இடைக்கால ஏற்பாடாக 12 நாட்டிகல் மைல்களுக்கு அப்பால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரும் கடல் பகுதிகளில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்த வலைகளை தமிழக அரசின் கீழ் வரும் கடல்பரப்பு வழியாக எடுத்து செல்ல அனுமதி வழங்க கோரியும் மோட்டார் படகு உரிமையாளர்கள், மீனவர்கள் பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்டோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அமர்வில் இன்று நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது வாதிட்ட சுருக்குமடி வலைக்கு ஆதரவான மீனவர்கள் தரப்பு மூத்த
வழக்கறிஞர்கள் கோபால் சங்கர் நாராயணன் மற்றும் சிராஜுதீன்..
மாநில அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டை மடி வலைகளை மத்திய அரசின்
கட்டுப்பாடடில் வரும் ஆழ்கடலுக்கு எடுத்துச் செல்ல தங்களுக்கு கடலில் தனிவழி அமைத்துக் கொடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
மேலும், 12 நாட்டிக்கல் மைல்களுக்கு அப்பால் சுருக்குமடி வலையை பயன்படுத்தலாம்
எனவும், சில வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என நிபுணர்குழு
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேபோல 12 நாட்டிக்கல் மைல்களுக்குள்ளாகவும் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து மீன்பிடிக்கலாம். மேலும் சுருக்குமடி வலை பயன்படுத்துவதால் கடல் வளம் அழிந்துவிடும், கடும் பாதிப்பை சந்திக்கும் என்ற வாதத்திற்கு போதிய தரவுகள் இல்லை என மத்திய அரசின் ஆய்வுக்குழுவின் அறிக்கைகளும் தெரிவிக்கின்றன. எனவே சுருக்குமடி வலைகளை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். என கோரிக்கை வைக்கப்பட்டது
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதம் வைத்த தமிழ்நாடு அரசு தரப்பு மூத்த
வழக்கறிஞர் முகுல் ரோத்தகி மற்றும் அரசு வழக்கறிஞர் குமணன் ஆகியோர்,
சுருக்கு மடி வலை என்றால் என்ன ? என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அந்த வலை சுமார் ஒரு ஹெக்டேர் அளவுக்கு பெரியது, பெரும் பொருட்செலவு செய்து
மீன்பிடிக்க செல்பவர்கள் பயன்படுத்துவது. அதைப் பயன்படுத்தி மீன் பிடிக்கும்போது
நடுக்கடலில் இருந்து கரை நோக்கி வரும் மீன்கள் முழுவதும் தடை படும். இது
மீன்பிடி தொழிலையே நம்பி உள்ள லட்சக்கணக்கான பாரம்பரிய மீனவர்கள் கடும்
பாதிப்படைவர் . இது கண்காணிப்பு உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் நிலக்கரி எடுப்பது போல் அல்ல. மாறாக கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது
12 கடல் மைல்களுக்கு அப்பால் தடை செய்யப்பட்ட வலைகளை அனுமதித்தாலும்
கடல்வளம் பெருமளவுக்கு பாதிக்கப்படும், ஏனெனில் அங்கிருந்து மீன்கள் 12
கடல் மைல்களுக்கு உள்பட்ட பகுதிக்கு வர இயலாமல் போகும்பட்சத்தில் உட்பகுதியில்
மீன்வளம் முழுமையாக அழிந்துவிடும், இது லட்சக்கணக்கான பாரம்பரிய மீனவர்களின்
வாழ்வாரத்தை கடுமையாகப் பாதிக்கும் என்று கூறினார்.
மேலும், மாநில் அரசுகளால் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்த அனுமதிக்கும்
மத்திய அரசு, மாநில எல்லைக்குள் உள்ள கடலின் கண்காணிப்பை மாநில அரசே
பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறுவதை ஏற்க முடியாது. இது நடைமுறைக்கு
சாத்தியமற்றது, எனவே சுருக்குமடி வலைகளை பயன்படுத்த அனுமதி வழங்கக்கூடாது
என்று வாதிட்டனர்.
மேலும் தமிழ்நாட்டை பொறுத்தவரை கடல் வளத்தை காக்க வேண்டும், லட்ணக்கணக்கான பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்பதே முக்கிய நோக்கம் அதற்காகவே தடை விதிக்கப்பட்டுள்ளது, அதில் எந்த தளர்வும் ஏற்படுத்தக்கூடாது என தெரிவித்தனர்
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சுருக்குமடி வலையை பயன்படுத்தி
எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மீன் பிடிக்கப் படுகிறது?, சுருக்குமடி வலையை
பயன்படுத்தி மீன் பிடிப்பவர்களின் படகுகள் தொடர்பான விவரங்கள் பதிவு
செய்யப்பட்டுள்ளதா ? என்பன உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தனர்.
பின்னர் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி கோரிய விவகாரத்தில் இடைக்கால
உத்தரவு பிறப்பிப்பதாக கூறி வழக்கின் உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து
உத்தரவிட்டனர்.