கனமழை காரணமாக மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட 24 மாவட்டங்களில் சுமார் 45 ஆயிரத்து 826 ஹெக்டேர் நெற்பயிர் நீரில் மூழ்கியுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.எஸ்.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக 83 கால்நடைகள் இறந்துள்ளதாகவும் 538 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கால்நடை இறப்பு மற்றும் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட 24 மாவட்டங்களில், சுமார் 45 ஆயிரத்து 826 ஹெக்டேர் நெற்பயிர் நீரில் மூழ்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தண்ணீரை விரைவில் வடிய வைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக விளக்கம் அளித்துள்ள அவர், கனமழை காரணமாக ஏற்பட்ட சேதங்களை சீரமைக்க அனைத்துத் துறை அலுவலர்களும் கள அளவில் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.








