திருவண்ணாமலையில், பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிரிவலத்தில் ஏராளமான பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்தனர்.
உலகப் பிரசித்தி பெற்ற நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அண்ணாமலையாரை வழிபட்டு கோயிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட மலையை சிவனாக எண்ணி 14 கிலோ மீட்டர் கொண்ட கிரிவலப் பாதையில் வலம் வந்து அண்ணாமலையாரை வழிபடுவார்கள். இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று இரவு 7.42 மணிக்கு தொடங்கியது. இன்று மாலை 05: 46 மணி வரை கிரிவலம் வர உகந்த நேரமாக கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும், குரு பவுர்ணமி என்பதாலும் திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்தனர். காலை முதலே பக்தர்கள் கிரிவலம் சென்றனர். 14 கிலோமீட்டர் கொண்ட கிரிவலப் பாதையில் உள்ள இந்திரலிங்கம், அக்னி லிங்கம், குபேர லிங்கம் உள்ளிட்டஅஷ்ட லிங்கங்களை வழிபட்டு திருநேர் அண்ணாமலையார், அடி அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய கோயில்களிலும் தரிசனம் செய்து அண்ணாமலைக்கு அரோகரா, ஓம் நமச்சிவாயா என்ற பக்தி முழக்கத்துடன் இரவு முழுக்க கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபட்டனர்.
மேலும் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். சாமி தரிசனம் செய்ய சுமார் 5 மணி நேரத்திற்கு மேலானது. பவுர்ணமி கிரிவலம் இரவில் தொடங்கியதால் மாலை வரை கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. தொடர்ந்து கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் மாலைக்கு மேல் அதிகரிக்க தொடங்கியது. பவுர்ணமி இன்று மாலை 5: 46 மணி வரை உள்ளதால் இன்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்
கிரிவலம் வரும் ஆன்மீக பக்தர்களின் வசதிக்காக 14 கிலோ மீட்டர் கொண்ட கிரிவலப் பாதை முழுவதும் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட இடங்களில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பக்தர்கள் அனைவரும் பாதுகாப்புடன் கிரிவலம் செல்ல ஏற்பாடுகள் செய்திருந்தனர். கிரிவலம் வரும் பக்தர்களுக்கு கிரிவலப் பாதையில் குடிதண்ணீர் மற்றும் கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதேபோல் 9 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்திருந்தனர்.
- பி.ஜேம்ஸ் லிசா








