36.9 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மும்முனை மின்சாரம்- இபிஎஸ் வலியுறுத்தல்

போதுமான அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்து, 24 மணி நேரமும் விவசாயிகளுக்கு விலையில்லா மும்முனை மின்சாரத்தை வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளின் முதுகை உடைக்கும் பல்வேறு தில்லுமுல்லு வேலைகளை திமுக அரசு செய்து வருகிறது. கோடைக்காலங்களில் ஆற்றுப்பாசனம், கிணற்று பாசனம், ஆழ்குழாய் பாசனம் ஆகியவற்ளை நம்பியே விவசாயம் நடைபெறும். இந்த நேரத்தில் தான் மின்சாரம் விவசாயத்திற்கு அதிகமாக தேவைப்படும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

திமுக ஆட்சியில், ஏற்கெனவே போதிய விதைநெல் கிடைக்காமலும்; உரம், பூச்சிமருந்து போன்ற இடுபொருட்கள் தட்டுப்பாட்டாலும் விவசாயிகள் அவதியுற்று வந்தனர். மேலும், கன மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை இந்த அரசு முழு நிவாரணம் வழங்கவில்லை. பயிர் காப்பீட்டு திட்டத்தின்படியும் இழப்பீட்டுத் தொகை முழுமையாக பெற்றுத் தரவில்லை.

இதையும் படிக்கவும்: பெரம்பூர் நகைக்கடை கொள்ளை; முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்லும் போத இடைத்தரகர்களின் தலையீடு இல்லாமல் விற்கமுடியாத அவலமும் நிகழ்ந்து வருகிறது. இந்த நேரத்தில் விவசாயிகளுக்கு விலையில்லா மும்முனை மின்சாரம் 24 மணிநேரமும் வழங்க முடியாது என்றும், முறை வைத்து தான் மின்சாரம் பிரித்து வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது ஏற்புடையதல்ல.

எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான காரணம் என்ன என்று, இன்று வரை புரியாத புதிராகவே உள்ளது. துறைதோறும் கமிஷன் அடிப்பதையே கொள்கையாக கொண்ட இந்த அரசு, செயற்கையான ஒரு மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறதோ என்ற எண்ணம் விவசாயிகள் மத்தில் எழுந்துள்ளது.

சுமார் ஒரு லட்சம் இலவச மின்சார இணைப்பை இந்த 22 மாத கால ஆட்சியில் தந்தோம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் இந்த ஆட்சியாளர்கள், அதன் பலனை விவசாயிகள் முழுமையாக அனுபவிக்க முடியாத அளவில்தான் செயல்பட்டு வருகின்றனர். தமிழக மின்சார வாரியம் நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறி தாங்க முடியாத அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்தி, சீரான மின் வினியோகத்தையும் தராமல், விவசாயிகளுக்கு விளையாட்டு காட்டுகிறது இந்த அரசு.

ஓரிரு நாட்களுக்கு முன்பு இந்த திமுக அரசு, தமிழ் நாட்டை டெல்டா மாவட்டங்கள் என்றும், டெல்டா அல்லாத மாவட்டங்கள் என்றும் இரண்டாகப் பிரித்து, காலையில் 6 மணி நேரம், இரவில் 6 மணி நேரம் என்று ஒரு நாளைக்கு மொத்தம் 12 மணி நேரம் மட்டுமே விவசாயிகளுக்கு விலையில்லா மின்சாரம் வழங்க உத்தேசித்துள்ளதாக நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளன.இது போன்று பிரித்து, இடைவெளிவிட்டு விவசாயத்திற்கு மின்சாரம் வழங்கும் போக்கு வேளாண் தொழிலை கடுமையாக பாதித்துவிடும். இதனால், விவசாயிகளுக்கு எந்தப் பலனும் இல்லை என்பது மட்டுமல்லாமல், விவசாயப் பணிகள் தடைபட்டு, சீர்குலைந்து போகும் சூழ்நிலை ஏற்படும். விவசாயிகள் மின்சாரத்தை பயன்படுத்தவில்லை என்று சொன்னால், அந்த மின்சார உற்பத்திச் செலவு குறையும் என்ற ஒரு தப்புக் கணக்கை இந்த ஆட்சியாளர்கள் போடுகிறார்கள்.

திமுக ஆட்சியில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் மின்சார வாரியத்திற்கு கூடுதல் வருமானம் கிடைத்துவருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது 2021-22ல்72 ஆயிரத்து 107 கோடியாக இருந்தது, மின்கட்டண உயர்வால் 15 ஆயிரம் கோடி ரூபாய் அதிகமாக கிடைக்கும் என செய்திகள் வெளிவந்தன.

சூரியசக்தி மின்சாரம், காற்றாலை மின்சாரம், அனல்மின்சாரம் இவை மூன்றும் முழுமையாக பெறப்படுமானால் விவசாயிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் நிலை ஏற்படும். எனவே போதுமான அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்து, 24 மணி நேரமும் விவசாயிகளுக்கு விலையில்லா மும்முனை மின்சாரத்தை வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading