தஞ்சையில் மது அருந்தி இருவர் உயிரிழந்த விவகாரத்தில், மதுவில் சயனைடு கலந்திருந்தது தெரிய வந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் அரசு மதுபான கடை திறப்பதற்கு முன்பே அருகில்
இருந்த பாரிலிருந்து மது வாங்கி குடித்த கீழவாசல் பகுதியை சேர்ந்த குப்புசாமி
மற்றும் விவேக் ஆகியவர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம்
தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்கள் தெரிவித்ததாவது..
“சம்பந்தப்பட்ட இருவரின் உயிர் இழப்புக்கு எரி சாராயம் காரணம் இல்லை. அவர்களின் உடல் உறுப்புகளில் சயனைடு கலந்திருப்பதற்கான தடயம் இருப்பதாக மருத்துவ அறிக்கை கிடைத்துள்ளது. மேலும் உயிரிழந்த விவேக் மனைவியை பிரிந்து வாழ்கிறார் எனவே குடும்பப் பிரச்சினை காரணமாக இருக்குமா என காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சயனைடு அளவு குறைவாக இருந்திருக்கலாம், அதனால்தான் மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சை அளித்துள்ளனர். அருகில் காசு தெரு பகுதியில் தங்கம் வேலை செய்யும் கடைகள் உள்ளன. அங்கு சயனைடு வாங்கி இருக்கலாம் எனவும் தகவல்கள் வருகிறது. ஒருவேளை இது தற்கொலையா அல்லது கொலையா என்ற
கோணத்திலும் விசாரணை செய்து வருகிறோம்.
இந்த மரணம் குறித்து விசாரணை செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மதுபாரில் கண்காணிப்பு கேமரா இல்லை, எனவே அருகில் உள்ள கடைகளில் கண்காணிப்பு கேமராவை கொண்டு அவர்கள் செயல்பாடுகள் குறித்தும் விசாரணை செய்து வருகிறோம். கெமிக்கல் அனாலிஸிக்ஸ் அடிப்படையில் சோதனை செய்தலில் கல்லீரல் உள்ளிட்ட பகுதியில் சயனைடு தடயம் உள்ளது.
மதுபான கடையை சீல் வைக்க வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் அடுத்தடுத்து இரண்டு மரணங்கள் அங்கு நடைபெற்றுள்ளதால், தடயங்கள் ஏதும் அழிந்து விடக்கூடாது என்பதற்காக பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. நாளைய தினமே அந்த கடை திறக்கப்படும். மதுபான கடை செயல்படலாமா வேண்டாமா என ஆய்வு செய்த பிறகு முடிவு எடுக்கப்படும்.” என தெரிவித்தனர்.







