ஜெய்ப்பூரில் உள்ள அரசு அலுவலகம் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2.31 கோடி பணம் மற்றும் 1 கிலோ தங்கக் கட்டிகளை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், யோஜனா பவன் என்ற அரசு அலுவலகம் கட்டிடம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு அரசு துறை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் உள்ள அலுவலகம் ஒன்றில் பணம் மற்றும் தங்கக் கட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார், அலுவலகம் முழுவதும் தீவிரமாக சோதனை செய்தனர். அந்த சோதனையின் போது, கட்டுக்கட்டாக ரூ.2.31 கோடி பணமும், 1 கிலோ தங்கக் கட்டிகளும் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர்.
இதையும் படியுங்கள் : ரூ.2000 நோட்டு – சந்தேகங்களும்… விளக்கங்களும்….
தொடர்ந்து அரசு அலுவலகத்திற்குள் பணம் மற்றும் தங்கக் கட்டிகளை பதுக்கி வைத்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் லஞ்சமாக பெறப்பட்டதா?? என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை கைப்பற்றி ஆய்வு செய்த போலீசார், இது தொடர்பாக 7 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.







