கர்நாடக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றப்படும் என பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி அறிவித்தார்.
சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. ஏறத்தாழ 4 நாட்கள் முதலமைச்சர் தேர்வு செய்யும் பணி கடும் இழுபறியில் நீடித்த நிலையில், ஏற்கனவே முதலமைச்சராக இருந்த சித்தரமையாவை காங்கிரஸ் மேலிடம் தேர்வு செய்தது.
இந்நிலையில், சித்தராமைய்யா தலைமையிலான காங்கிரஸ் அரசு இன்று பதவியேற்றது. முதலமைச்சராக சித்தராமைய்யாவுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து துணை முதலமைச்சராக டி.கே சிவக்குமார் பதவியேற்றார். தொடர்ந்து பரமேஷ்வரா, முனியப்பா , கே.ஜி.ஜார்ஜ் எம்.பி.பாட்டீல் , சதீஷ் ஜார்கோலி, பிரியங்க் கார்கே , ராமலிங்க ரெட்டி, ஜமீர் அகமது கான் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
கண்டிரவா மைதானத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் மைதானத்திற்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, தமிழ்நாடு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் , மநீம தலைவர் கமல்ஹாசன், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெஹ்பூபா முஃப்தி, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெஹ்லாட் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லாஹ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசியதாவது:
காங்கிரஸ் கட்சி கர்நாடகத்தில் ஆட்சி அமைத்ததற்கு காரணமான கர்நாடக மக்களுக்கு இதயம் நிறைந்த நன்றி. இனிமேல் கர்நாடகத்தில் பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம். அதேபோல வாக்குறுதி அளித்தபடி, கர்நாடக மக்களுக்கு இலவசமாக 200 யூனிட் மின்சாரம் வழங்கப்படும். தூய்மையான, ஊழலற்ற ஆட்சியை நாங்கள் வழங்குவோம்.
மக்களுக்கு 5 வாக்குறுதிகளை நாங்கள் அளித்துள்ளோம். பொய்யான வாக்குறுதிகளை வழங்க மாட்டோம். நாங்கள் சொல்வதைச் செய்வோம். இன்று கர்நாடக அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் நடக்கும், அந்த கூட்டத்தில் முக்கியமான 5 வாக்குறுதிகள் சட்டமாக மாறும்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்ற பிறகு, இந்த தேர்தலில் காங்கிரஸ் எப்படி வென்றது என்று பல விஷயங்கள் எழுதப்பட்டது. பல பகுப்பாய்வுகள் செய்யப்பட்டன, காங்கிரஸ் கட்சி ஏழைகள், தலித்துகள் மற்றும் ஆதிவாசிகள், பின்தங்கிய மக்களுடன் நின்றதால் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
காங்கிரஸிடம் உண்மை இருந்தது. பாரதிய ஜனதாவிடம் பணம், போலீஸ் என அனைத்தும் இருந்தது ஆனால் கர்நாடக மக்கள் அனைத்து அதிகாரங்களையும் தோற்கடித்தனர்.” என ராகுல் காந்தி தெரிவித்தார்.







