போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி போலிசில் சிக்கியது எவ்வாறு?

பழனியில் ஐஏஎஸ் அதிகாரி எனக்கூறி விடுதியில் இலவச அறை கேட்ட நபர் சிக்கினார். மயிலாடுதுறை மாவட்டம் மாயவரத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் பழனி மலையடிவாரத்தில் உள்ள தேவஸ்தான தங்கும் விடுதிக்கு சைரன் பொருத்திய காரில்…

பழனியில் ஐஏஎஸ் அதிகாரி எனக்கூறி விடுதியில் இலவச அறை கேட்ட நபர் சிக்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம் மாயவரத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் பழனி மலையடிவாரத்தில் உள்ள தேவஸ்தான தங்கும் விடுதிக்கு சைரன் பொருத்திய காரில் வந்து, தன்னை ஐஏஎஸ் அதிகாரி என்று அறிமுகப் படுத்திக்கொண்டார். மேலும் தங்குவதற்கு இலவசமாக அறை வழங்குமாறும் கேட்டுள்ளார். இந்நிலையில் வழக்கமாக ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் வந்தால் உள்ளூர் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்கூட்டியே தகவல் தெரிவிப்பது வழக்கம்.எனவே தங்கும் விடுதியில் இருந்த மேலாளர் அடையாள அட்டையை கேட்டும், பழனியில் உள்ள வருவாய்த்துறை அதிகாரி ஒருவரை பரிந்துரை செய்யவும் கேட்டுள்ளார்.

அப்போது முன்னுக்குப் பின் முரணாக குமார் பதில் அளித்ததை தொடர்ந்து சந்தேகமடைந்த கோயில் ஊழியர்கள் பழனி அடிவாரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.இதை அறிந்த குமார் காரை விட்டு விட்டு தப்பி ஓடியபோது, அவரை துரத்திச் சென்ற கோயில் ஊழியர்கள், குமாரை பிடித்து வந்து பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் மயிலாடுதுறையில் வசித்துரும் குமார் காரில் சைரன் பொருத்திக் கொண்டு, தமிழக அரசு என்று பதாகையை மாட்டிக்கொண்டு வலம் வந்ததும் தெரியவந்தது. பல இடங்களில் தன்னை ஐபிஎஸ் அதிகாரி என்று சொல்லி கூறிக்கொண்டு சலுகைகளை பெற்று அனுபவித்ததும் தெரியவந்துள்ளது. கடைசியாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்ற குமார் ஐஏஎஸ் அதிகாரி எனக் கூறி சிறப்புதரிசனம் செய்து விட்டு வந்ததும் தெரியவந்தது. குமார் மீது வழக்கு பதிவு செய்த பழனி அடிவாரம் போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.