உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் பதவியேற்றுக் கொண்டார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா நேற்று ஓய்வு பெற்றார். அவரை சிறப்பிக்கும் விதமாக உச்சநீதிமன்ற வழக்காடல் நிகழ்வு நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.
இந்த நிலையில் மூத்த நீதிபதியான உதய் உமேஷ் லலித், புதிய தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்றார்.
இதற்கான விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்றது. இதில் உச்ச நீதிமன்றத்தின் 49ஆவது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியான லலித் 74 நாட்கள் மட்டுமே பணியாற்றி, வரும் நவம்பர் 8-ம் தேதி ஓய்வுபெறவுள்ளார்.







